கொச்சி: தமது நிறுவனத்தில் பணி செய்யும் கேரளத்தைச் சேர்ந்த ரஹானா பாத்திமா கைது செய்யப் பட்ட நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது பி,எஸ்.என்.எல்., நிறுவனம்.
கேரளத்தைச் சேர்ந்த ரஹானா பாத்திமா என்பவர், கம்யூனிஸ மற்றும், நக்சல் குழுக்களுடன் கொண்டிருந்த தொடர்பால், தனது பேஸ்புக் பக்கத்தில் ஐயப்பன் குறித்தும், சபரிமலை, ஐயப்ப பக்தர்கள் குறித்தும் அவதூறுக் கருத்துகளை எழுதி வந்தார்.
இந்நிலையில் திடீரென தாமும் சபரிமலைக்கு செல்லப் போவதாகக் கூறி, கடந்த மாதம் சபரிமலை வந்தார். அவர் அதிரடிப்படை சீருடை, ஹெல்மெட் அணிந்து, அய்யப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்றபோது, பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக, சந்நிதிக்குள் நுழைய முடியவில்லை. இதை அடுத்து, அவரால் தங்கள் கிளையில் பொதுமக்களுடன் பிரச்னைகள் அதிகம் ஏற்படுவதாகக் கூறி, அவர் வேலை செய்து வந்த பிஎஸ்.என்.எல்., நிறுவனம் அவரை ரவிபுரம் கிளைக்கு பணி மாற்றி உத்தரவிட்டது.
இந்நிலையில், ரஹானா பாத்திமா பேஸ்புக் பக்கத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய விதத்தில் படங்களும் கருத்துகளும் பதிவிட்டதற்காக அளிக்கப் பட்ட புகாரின் பேரில் பத்தனம்திட்ட போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் வேலை செய்து வந்த பிஎஸ்என்எல் நிறுவனம் ரஹானாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.