சென்னை: பல்வேறு முறைகேடு புகார்கள் தொடர்ந்து வருவதால் மாணவர்களின் முன்னிலையில் மறுமதிப்பீடு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவு, வரும் செமஸ்டரில் இருந்தே தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, எம்.ஐ.டி ஆகிய மூன்று பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் விடைத்தாள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தால் அந்தந்த மாணவர்கள் முன்னிலையிலேயே விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யும் புதிய முறை நடப்பு செமஸ்டரில் இருந்து செயல்பாட்டுக்கு வருகிறது.
மறுமதிப்பீடு செய்யும் குழுவில் பாடம் கற்பித்தவர், அனுபவம் வாய்ந்த பேராசிரியர், துறைத் தலைவர் ஆகிய மூன்று பேரும் இருப்பார்கள். மாணவர் முன்னிலையில் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யும் போது, மாணவரின் ஐயம் தீர்வதுடன், ஏன் மதிப்பெண் குறைவாக வழங்கப்பட்டது என்பதற்கு குழுவில் இருப்பவர்களும் பதில் அளிப்பார்கள்.
இந்தப் புதிய முறை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 471 இணைப்புக் கல்லூரிகளுக்குப் பொருந்தாது என்று கூறப் பட்டுள்ளது.
முக்கியமாக, மறுமதிப்பீட்டில் விடைத்தாள் திருத்தும் காலநேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னர் 3 மணி நேரத்தில் முப்பது விடைத் தாள்கள் மறு மதிப்பீடு செய்யப்பட்டன. இப்போது 4 மணி நேரத்தில் 25 விடைத் தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்படும்.