
ஐயா, மணலோட பிடிபட்ட டிராக்டரை காணும் என்று வடிவேலு பாணியில் போலீசிடம் புகார் அளித்த தாசில்தாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருட்டு மணல் அள்ளியதாக டிரைவருடன் மணல் டிராக்டரையும் கைப்பற்றிய காவல்துறை, அதனை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்க நள்ளிரவில் மணலுடன் மாயமாகியுள்ளது அந்த டிராக்டர்!
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் துணைச்சரக காவல் நிலையத்திற்குட்பட்டது சின்னக்கோவிலான்குளம் காவல் நிலையம். இந்தக் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட செந்தட்டி ஓடையில் அவ்வப்போது மணல் திருட்டு நடைபெறுவது வழக்கமான நிகழ்வாகி விட்டது.
இந்நிலையில் ஞாயிறன்று பின்னிரவில் TN 79 D 6642 பதிவெண் கொண்ட டிராக்டரில் சங்கரன்கோவில் காந்திநகரைச் சேர்ந்த வேல்சாமி மகன் காளிராஜ் மணல் எடுத்துக் கொண்டிக்க, அங்கு வந்த சின்னக்கோவிலான்குளம் காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ.முருகனும், தலைமைக்காவலர் காமராஜூம் மணல் திருட்டினை உறுதி செய்து, காளிராஜை கைது செய்து, மணலுடன் டிராக்டரையும் கைப்பற்றி சங்கரன்கோவில் டி.எஸ்.பி.அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சங்கரன்கோவில் டி.எஸ்.பி.ராஜேந்திரனோ, “அதனை அப்படியே தாசில்தாரிடம் ஒப்படைத்து விடுங்கள்” என கட்டளையிட, அவர்களும் அந்த நள்ளிரவில் தாசில்தார் இல்லாமலேயே தாசில்தார் அலுவலகத்தாரிடம் ஒப்படைத்து விட்டு திரும்பி இருக்கின்றனர்.
இந்நிலையில், அதிகாலை 4 மணிக்கு டிராக்டர் மணலுடன் மாயமானது. மறுநாள் திங்களன்று காலை அலுவலகத்திற்கு வந்த தாசில்தாரும், மணலுடன் டிராக்டரை காணவில்லை என நகர காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
“சங்கரன்கோவில் எம்.எல்.ஏ.வும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான ராஜலெட்சுமிக்கு சொந்தமானது தான் காவல்துறையிடம் பிடிப்பட்டு, தாசில்தார் அலுவலகத்திலிருந்து மாயமான TN 79 D 6642 பதிவெண் கொண்ட டிராக்டர். அமைச்சர் ராஜலெட்சுமியின் மாமனார் வேலுச்சாமிக்கு மணல் திருடுவதே பிரதான தொழில் என்கிறார்கள். ஆரம்பத்தில் மாட்டு வண்டி மூலம் மணல் கடத்தியவர் இப்பொழுது டிராக்டர் மூலம் மணல் கடத்துகிறார் என்று புகார் கூறப்படுகிறது.
இது மாவட்டத்திலுள்ள அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அன்று அவரின் டிரைவர் எங்கள் போலீசாரிடம் மாட்டிக்கொள்ள, அமைச்சர் தலையீட்டின் பேரில் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர் போலீசார்.
அதிகாலையிலேயே டிராக்டரை மணலுடன் மீட்டுச் சென்றிருக்கின்றனர் அமைச்சரின் கையாட்கள். இது தெரிந்த தாசில்தாரும் நமக்கேன் வம்பு..? எனும் ரீதியில் புகாரை மட்டும் கொடுத்துவிட்டு ஒதுங்கிவிட்டார். அந்த டிராக்டர் மறுபடியும் திருட்டு மணல் அடிக்க புறப்பட்டது தான் வேடிக்கை! ஆனால், அசிங்கப்பட்டது என்னவோ காவல்துறை தான் என்கிறார் காவல் அதிகாரி ஒருவர். #மெய்யாலுமா



