இந்தியாவின் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேயருக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கே வீர சாவர்க்கர் வெகுநாட்கள் சிறைவைக்கப் பட்டிருந்த அந்தமான் சிறைச்சாலைக்குச் சென்றார்! அங்கே சூரிய உதயத்தைக் கண்டு ரசித்தார். அப்போது பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து இருந்தார். நாட்டின் சுதந்திரத்திற்காக, தங்கள் உயிரை கொடுத்த நம்முடைய சுதந்திர போராட்டத்தின் துணிச்சலான ஹீரோக்களைப் பற்றி நினைவு கூர்ந்ததாக டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் மோடி.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அந்தமான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலா பானி சிறையை பார்வையிட்டார். அங்குள்ள தியாகிகள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மோடி, இந்து மகாசபைத் தலைவரான வினாயக் தாமோதர் சாவர்க்கர் ஆங்கிலேயரால் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று பார்வையிட்டார்.
வி.டி.சாவர்க்கர் படத்தின் முன் சற்று நேரம் கண்களை மூடியவாறு மௌனமாக அமர்ந்து தியானம் செய்தார். பின்னர், அங்குள்ள தூக்கு மேடை மற்றும் சிறை அருங்காட்சியகம் ஆகியவற்றையும் பார்வையிட்டார் மோடி.
அந்தமானில் உள்ள மூன்று தீவுகளுக்கு இன்று பெயர் மாற்றம் செய்த பிரதமர் மோடி இங்குள்ள ராஸ் தீவு, இனி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்றழைக்கப்படும் என்று அறிவித்தார்.