திருப்பதி: மாடு பிடிக்கும் போட்டியை தடுக்கச் சென்றார் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர். அவருக்கு காளை மாடு கொடுத்த ஷாக் ட்ரீட்மென்ட்தான் இப்போது ஒரே பேச்சு!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகில் இருக்கும் குக்கிராமம் ஒன்றில் மாடு பிடிக்கும் போட்டி இன்று காலை நடைபெறுவதாக இருந்தது. இது தொடர்பாக சித்தூர் எஸ்பி விக்ராந்த் பாட்டிலுக்கு தகவல் கிடைத்தது.
அனுமதி பெறாத நிலையில் மாடு பிடிக்கும் போட்டி நடத்திய காரணத்தால், அதனைத் தடுத்து நிறுத்த குப்பம் போலீசார் அந்தக் கிராமத்துக்குச் சென்றனர்.
அப்போது போட்டியில் பங்கேற்பதற்காக காளை மாடு ஒன்று இருந்ததைக் கண்ட கான்ஸ்டபிள் ஒருவர், அந்தக் காளை மாட்டின் கயிற்றைப் பிடித்துக் கொண்டு, ஒரு சுற்று சுற்றி, காலுக்குக் கீழ் வைத்து அதனைத் தன் காலால் போட்டு அழுத்தமாக மிதித்துக் கொண்டு நின்றார்.
வேறு ஏதாவது மாடுகள் அங்கே வருகின்றனவா என்று பார்த்தபடி இருந்த போது, திடீரென அந்தக் காளை மாடு, கயிறை இழுத்துக் கொண்டு ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தது. இதனால் தடுமாறிய கான்ஸ்டபிள், தன் கையால் அந்தக் கயிறை இழுக்க முயன்றார். ஆனால் மாடு அந்த கான்ஸ்டபிளை தர தரவென இழுத்துக் கொண்டு ஓடியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் சிலர் ஓடோடிச் சென்று, அந்த மாட்டை தடுத்தி நிறுத்தி, கான்ஸ்டபிளைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் தரையில் வெகுவேகமாக மாட்டால் இழுத்துச் செல்லப் பட்டிருந்தார்.
ஓடி வந்த இளைஞர்களைக் கண்டு மேலும் கலவரமாகி மாடு ஓடத் தொடங்கியது. இதனால் கீழே விழுந்து தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் படுகாயமடைந்தார்.
அவரைக் காப்பாற்ற முயன்ற இளைஞர்கள் 10 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த போலீஸ் கான்ஸ்டபிள் குப்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவத்தால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.