திருப்பதி: மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த 6 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப் பட்டன. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப் பட்டனர்.
மேற்கு கோதாவரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லஷ்மி நாராயணா உத்தரவின் பேரில் போலீசார் இன்று காலை ஏழூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் தனியார் ஹோட்டல் ஒன்று அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் காணப்பட்ட கடப்பா மாவட்டம் திப்பையா பள்ளி கிராமத்தை சேர்ந்த மகேந்திரா ரெட்டி என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஏழூர் அருகே அப்பாராவ் என்பவருக்கு சொந்தமான பாமாயில் தோட்டத்தில் கடத்துவதற்கு தயார் நிலையில் செம்மரக்கட்டைகளை வெட்டி பதிக்கி வைத்திருப்பதாக மகேந்திர ரெட்டி கூறினார்.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் கடப்பா மாவட்டம் ருத்ரவரம் மண்டலத்தை சேர்ந்த பிரதாப் என்பவரை கைது செய்து தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 6 டன் எடையுள்ள 175 செம்மரக்கட்டைகளை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக சர்வதேச அளவில் செம்மரம் கடத்தலில் முக்கிய புள்ளியாக விளங்கும் ஷேக் ஷவாளி என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.