
தென் மாநிலங்களின் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கோதாவரி-காவிரி ஆறுகளை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு, அமல்படுத்தவுள்ளது.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே, கோதாவரி நதியின் 1100 டிஎம்சி நீர் கடலுக்குள் வீணாவதைத் தடுப்பதும், அதனை தேவையான வழிகளில் பயன்படுத்திக் கொள்வதும்தான்!
ஆந்திர மாநிலம் அமராவதியில் நேற்று மத்திய நீர் வளத்துறை அமைச்சரும் பாஜக., மூத்த தலைவருமான நிதின் கட்கரி பாஜக., நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியவை…: தென் மாநிலங்களின் நீர்த் தட்டுப்பாட்டு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கோதாவரி – காவிரி ஆறுகளை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கோதாவரி ஆற்றிலிருந்து 1,100 டி.எம்.சி., நீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த இரு ஆறுகளையும் இணைப்பதால் கோதாவரி ஆற்று நீரை நான்கு தென் மாநிலங்களிலும் பயன்படுத்த முடியும்.

இதற்காக, கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணாறு – காவிரி ஆறுகளை இணைக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக விரைவில் அனுப்பப்படும்.
இந்த திட்டத்தை நிறைவேற்றத் தேவையான நிதியை உலக வங்கி அல்லது ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் திரட்டுவோம்.
கோதாவரி காவிரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தண்ணீர் தொடர்பாக தமிழகம், கர்நாடக மாநிலங்களுக்கு இடையில் நிலவும் நெடுன்காலப் பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வு காணலாம்.

கோதாவரி – காவிரி ஆறுகளை கால்வாய்கள் மூலம் இணைக்கும் போது நீர் ஆவியாகி நீர் இழப்பு ஏற்பட்டு விடுகிறது. எனவே, தனித்துவமான தொழில்நுட்பம் மூலம் வலுவூட்டப்பட்ட குறைந்த தடிமன் கொண்ட ஸ்டீல் பைப்களை பயன்படுத்தவுள்ளோம். இதனால் திட்ட செலவும் கணிசமாகக் குறையும்
போலாவரம் திட்டத்துக்கு மத்திய நிதி 100 சதவீதம் அளிக்கப் பட்டுள்ளது. போலாவரம் திட்டத்துக்காக மத்திய அரசு முழு அக்கறை செலுத்தி, 100 சதவீத மத்திய நிதிப் பங்களிப்பிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், சந்திரபாபு நாயுடு இதற்காக பிரதமர் மோடிக்கோ, மத்திய அரசுக்கோ எந்த வித பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கவில்லை என்றார்.



Leave a Reply