பாகிஸ்தானில் இருந்து விடுதலையாகி நேற்று இந்தியா திரும்பிய விமானி அபிநந்தனுக்கு மரியாதை அளிக்கும் பொருட்டு, வெள்ளிக்கிழமை நேற்று பிறந்த ஆண் குழந்தைக்கு அபிநந்தனின் பெயரை வைத்தனர் ராஜஸ்தான் தம்பதியர். இந்தச் செய்தி வெளியானதும், பலரும் அந்தத் தம்பதிக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் நிகல்பூர் மற்றும் சங்கனேர் பகுதிகளில் பிறந்த 2 குழந்தைகளுக்கு பாகிஸ்தான் படையினரால், சிறை பிடிக்கப்பட்டு, பின் விடுதலையான இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. வீரர் அபிநந்தனைப் போன்று எங்கள் குழந்தையும் பெரிய அளவில் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பர் என்று அக் குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்தனர்.
ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள கிஷான்கர் பகுதியில் நேற்று மாலை பிறந்த குழந்தைக்கு அபிநந்தனின் பெயர் சூட்டப்பட்டது. இதுகுறித்து குழந்தையின் தாத்தா ஜனேஷ் பூட்டானி தெரிவிக்கையில், ”நேற்று மாலை எங்கள் மருமகள் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். நம் விமானி அபிநந்தனை கௌரவப்படுத்தும் விதமாக அவரின் பெயரை வைத்துள்ளோம். அபிநந்தனை எண்ணிப் பெருமை கொள்கிறோம். அபிநந்தனை விடுதலை செய்வது தொடர்பான செய்திகளை செய்தி சேனல்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது அறிந்து கொண்டோம். அப்போது என் மருமகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பின்னர் நல்லபடியாக பிரசவம் ஆனது” என்றார்.
இது குறித்து குழந்தையின் தாய் சப்னாதேவி தெரிவித்த போது, ”அபிநந்தன் என என் மகனை நான் அழைக்கும் போதெல்லாம், விமானி அபிநந்தனின் வீரச் செயல்களைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டே இருப்போம். என் மகன் வளர்ந்து பெரியவனாகும்போது, அவரைப் போன்ற துணிச்சல் மிக்க வீரனாக மாற வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்” என்றார்
முன்னதாக, பாகிஸ்தானில் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த போது, அவரிடம் கேட்கப் பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களும், தேசப் பாதுகாப்பைக் காட்டிக் கொடுக்காமல் வெகு சகஜமாகவும் வீரமாகவும் சமயோஜிதமாகவும் அவர் பேசிய பேச்சுக்களும் பாகிஸ்தான் ராணுவத்தினர் வெளியிட்ட வீடியோவில் வெளிப்பட்டது.
பாகிஸ்தான் ராணுவத்தினர் தங்களது உபசரிப்பு முறை, எதிரி வீரரைத் தொல்லைப் படுத்தாமல் கௌரவமாக நடத்தும் முறை இவற்றை வெளி உலகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த வீடியோக்களை வெளியில் உலவ விட்டனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, வீரர் அபிநந்தன் இந்தியாவில் பெரும் ஹீரோ ஆகி விட்டார்.
அபிநந்தனின் துணிச்சலும் தைரியமும் இந்தியா முழுவதும் பேசப்படும் விஷயம் ஆனது. இந்தியர்கள் அபிநந்தனை ஒரு ஹீரோவாகவே பார்த்தனர்.