புது தில்லி: தலைநகர் தில்லி, வடக்கு மற்றும் கிழக்கு இந்தியா, நேபாளம் ஆகிய பகுதிகளில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தின் போகராவின் கிழக்கே 80 கி.மீ. தொலைவில் 15கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், நேபாளத்தின் போகராவில் இருந்து தமிழகம் வரை உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் தில்லியில் மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு மீண்டும் இயங்கின. இந்நிலையில், நிலநடுக்கம் தொடர்பாக உயர்மட்டப் குழுவுடன் பிற்பகல் 3 மணிக்கு பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். நேபாள பிரதமர் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருப்பதால், அவரை மோடி தொலைபேசியில் அழைக்க முயன்றும் முடியவில்லை. இந்நிலையில், நேபாள குடியரசுத் தலைவரை தொடர்பு கொண்டு நிலைமையை மோடி கேட்டறிந்தார். இந்தியா சார்பில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதாக மோடி வாக்களித்தார். இந்நிலையில், இந்தியாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் மற்றும் நேபாளத்துக்கான உடனடி மீட்புக் குழு அனுப்புவது குறித்து ஆலோசிக்க உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அடங்கிய இந்தக் கூட்டம் மதியம் 3 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.

