திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் தெப்பக்குளத்தில் பைப் வெடிகுண்டுகள் அடங்கிய மூட்டை கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. இங்கே அண்மையில், ரகசிய அறைகளில் அரிய வகை தங்க நகைகள், பொற்குவியல்கள் இருப்பது கண்டறியப் பட்டதைத் தொடர்ந்து, இது மேலும் புகழ் பெற்றது. இங்கே அரிய பொக்கிஷங்கள் இருப்பது தெரியவந்ததை அடுத்து, கோவிலுக்குள் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களும் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தக் கோவில் கிழக்கு வாசல் பகுதியில் பத்மதீர்த்தக் குளமும், வடக்கு வாசல் பகுதியில் ஸ்ரீபாத குளமும் அமைந்துள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவின்கீழ் இந்தக் குளங்கள் தூர் வாரப்பட்டு குளத்தைத் தூய்மைப் படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஸ்ரீபாத குளத்தில் நேற்று வழக்கம் போல் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றபோது, ஒரு மணி அளவில் ஒரு மண்ணில் புதைந்த நிலையில் ஒரு சாக்கு மூட்டை கண்டெடுக்கப்பட்டது. அதனை கோவில் அதிகாரிகள் மற்றும் போலீஸார் பார்த்தபோது, வெடிகுண்டாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த சாக்கு மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் ஐந்து ‘பைப்’ வெடிகுண்டுகள் இருந்தது தெரிந்தது. அவற்றைக் கைப்பற்றிய அதிகாரிகள், ஆய்வுக் கூடத்துக்கு அவற்றை அனுப்பிவைத்தனர். இந்த வெடிகுண்டுகள், நாச வேலை எதற்காகவாவது கொண்டு வரப்பட்டதா? என்று விசாரணை நடத்தினர். இந்நிலையில் அவை 2 ஆண்டுகளுக்கு முன்னர் கோவில் குளத்தில் போடப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. தற்போது அதன் வீரியத்தன்மை குறைந்திருக்கலாம் என்றும் அதில் ஒரு குண்டு வெடித்த நிலையில் கருகியிருந்தது என்றும், ஆய்வு நடத்தப் பட்டு வருகிறது, விரைவில் முழு உண்மையும் தெரியும் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பத்மநாமசுவாமி கோவில் தெப்பக்குளத்தில் பைப் வெடிகுண்டு மூட்டை கண்டுபிடிப்பு
Popular Categories


