பாஜக பெண் வேட்பாளர் சாத்வி பிரக்யா சிங் தாக்குர் தனக்கு நேர்ந்த கொடுமைகளைச் சொல்லி கண்கலங்கி கதறி அழுதது, கூட்டத்தினரையும் அழவைத்தது.
மத்திய பிரதேசத்தின் போபால் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கிற்கு எதிராகப் போட்டியிடுகிறார் பாஜக.,வின் பெண் வேட்பாளர் சாத்வி பிரக்யா சிங் தாக்குர்!
மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றம்சாட்டப்பட்டு, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசால் ஹிந்து பயங்கரவாதிகள் என்ற புதிய சொற்றொடர் உருவாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டவர் இவர். இவர் கைதாகி சிறையில் இருந்த போது தம்மை சிறை அதிகாரிகள் அடித்து உதைத்து துன்புறுத்தியதை கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.
குறிப்பாக, மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படையில் தலைவராக இருந்த ஐபிஎஸ் அதிகாரியான ஹேமந்த் கர்கரே, அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் வற்புறுத்தலின்படி, 2008ஆம் ஆண்டில் மாலேகான் குண்டு வெடிப்பில் பிரக்யா சிங் தாக்குர் மற்றும் இன்னும் சில ஹிந்து அமைப்பு தலைவர்களையும் வஞ்சகத்தால் பொய்யாகச் சேர்த்து, அவர்களை கொடுமைப்படுத்தியுள்ளதாக தெரியவந்தது.
அதனை சாத்வி பிரக்யா சிங் தாக்குர், பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ஹேமந்த் கர்கரே தன்னை அதிக அளவில் டார்ச்சர் செய்ததாகவும், அப்போது தாம் அவரை சபித்ததாகவும், அவரது பாவ கர்மாவினால்தான் அவர் மோசமாக உயிரிழந்தார் என்றும் சாத்வி பிரக்யா கூறியுள்ளார்.
முஸ்லீம்களை படுகொலை செய்ததாக தம்மை ஒப்புக் கொள்ளும்படி கூறி சித்ரவதை செய்ததாக அவர் தெரிவித்தார். 23 நாட்களாக இரவும் பகலும் போலீசார் தம்மை பெல்ட்டால் அடித்து உதைத்ததாக கூறிய அவர், தம்மை நிர்வாணப்படுத்தப் போவதாக மிரட்டியதாகவும் கூறினார்.
பாஜக பொதுக்கூட்டத்தில் இதனை விவரித்த அவர் கண்ணீர் விட்டு அழுதார். மகாராஷ்ட்ராவின் மாலேகான் பகுதியில் 2008ம் ஆண்டு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட பெண் சாமியரான சாத்வியை அண்மையில் நீதிமன்றம் விடுதலை செய்து அப்பாவிகள் என்று தீர்ப்பளித்தது.
இந்நிலையில் அவர் அண்மையில் பாஜக.,வில் இணைந்தார். தொடர்ந்து, மத்திய பிரதேச மாநிலம் போபாலில், காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்குக்கு எதிராக பாஜக., சார்பில் களம் இறங்குகிறார்.