ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை மீண்டும் மீண்டும் திருடன் என்றும், காவல்கார திருடன் என்றும், உச்ச நீதிமன்றமே திருடன் என சர்ட்டிபிகேட் கொடுத்து விட்டதாகவும் கண்ணை மூடிக் கொண்டு பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்ட விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரபேல் ஒப்பந்தத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்த சீராய்வு மனு தாக்கல் செய்யப் பட்டபோது, கடந்த 10ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சீராய்வு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களையும், ஒரு நாளேடு வெளியிட்ட தகவல்களையும் பரிசீலிப்பதாகத் தெரிவித்தது. மேலும், அவற்றையும் சேர்த்து விரைவில் ரபேல் விவகாரத்தில் விசாரணை தொடங்கும் என்று கூறியது.
இந்நிலையில், இந்தத் தீர்ப்பு தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராகுல் காந்தி, “காவலாளி என கூறிக் கொள்பவர் திருடன் என்று நீதிமன்றமே கூறிவிட்டது” என்று தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் அவ்வாறு எதுவும் சொல்லாத போது, ராகுல் உச்ச நீதிமன்றத்தின் பெயரை இழுத்து, உச்ச நீதிமன்றமே மோடியை திருடன் என்று கூறிவிட்டது என்று பொய்யான தகவல்களைப் பகிர்ந்தார்.
ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு எதிராக பாஜகவின் தில்லி எம்பி.,யுமான மீனாட்சி லேகி, உச்ச நீதிமன்றத்தில் கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தின் தீர்ப்பை ராகுல் காந்தி வேண்டுமென்று திரித்து, அதற்கு அரசியல் சாயம் பூசி, தனி மனிதரான பிரதமர் மோடியை தாக்கிப் பேச பயன்படுத்தியுள்ளார். தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் ராகுல்காந்தி பயன்படுத்திய வார்த்தைகளைக் கூறவில்லை என அந்த மனுவில் தெரிவித்தார்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் தனது பேச்சுக்குக்கு உரிய விளக்கத்தை வரும் 22ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்றும், மனு குறித்து 23ஆம் தேதி விசாரணைக்கு மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறியிருந்தது.
இதன்படி, காங்கிரஸ் தலைவர் ராகுல் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் “ரபேல் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பின் போது, பிரச்சாரத்தில் இருந்தபோது ஒரு வேகத்தில் பேசிவிட்டேன். ஆனால் தீர்ப்பின் சாரம்சம் தெரியாமல் பேசிய என் பேச்சை எதிர்க்கட்சிகள் தவறாகப் பயன்படுத்திக்கொண்டன. நீதிமன்றத்தின் உத்தரவுகளை, மாண்புகளை மதிக்காத வகையில் செயல்பட வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை” என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், ராகுல் அளித்த பதில் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை எனக் கூறியது. மேலும் ராகுல் தனது விளக்கத்தை மீண்டும் அளிக்க வேண்டும் என்று கூறியதோடு விசாரணையை வரும் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும், அதன் பின்னர் அன்றைய தினமே ரபேல் வழக்கில் சீராய்வு மனுக்களும் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.