டிக்-டாக் செயலிக்கான தடையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீக்கியது. ஆபாசம் துளியும் இல்லாமல் பார்த்துக் கொள்வதாக அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் உறுதி கூறியது.
இன்று இறுதி உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி டிக் டாக் தடை குறித்த வழக்கினை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று விசாரித்தது.
இந்த விசாரணையின் முடிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், டிக்டாக் செயலியை பயன்படுத்தவும் தரவிறக்கம் செய்யவும் விதிக்கப்பட்டிருந்த தடையை சில நிபந்தனைகளுடன் நீக்குவதாகக் கூறியது.
சிறுவர் சிறுமியர் பெண்களின் ஆபாசப் படங்களை டிக் டாக் செயலில் பதிவேற்றம் செய்யக் கூடாது என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்தது! டிக் டாக் செயலியில் ஆபாசம் மற்றும் பிரச்சனைக்குரிய வீடியோக்கள் வெளியிடப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியது
இதனிடையே டிக்டாக் செயலில் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப் பட்டால் அது உடனடியாக அகற்றப்படும் என்று டிக்டாக்கின் பைட்-டான்ஸ் நிறுவனம் சார்பில் கூறப்பட்டது
தவறான நோக்கத்திலோ (அ) ஆபாசமாகவோ வீடியோ பதிந்தால் அடுத்த 15 நிமிடங்களில் வீடியோ நீக்கம் செய்யப்படும் என்று, டிக்-டாக் செயலி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உறுதி கூறியது.
நிபந்தனைகளை மீறினால் நீதிமன்ற அவமதிப்பை சந்திக்க நேரிடும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்தது.
டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நிபந்தனையுடன் நீக்குவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறியதை அந்நிறுவனம் ஏற்றுக் கொண்டது. இதை அடுத்து, டிக்டாக் செயலியை ஆர்வத்துடன் பயன்படுத்தி வந்த பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.