வழக்கம் போல்… ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை மே 30 வரை நீட்டித்து டில்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006ல் நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கு, அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றது என்றும், அதில் கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததாகவும் கூறப் பட்டது. இதுதொடர்பாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி சிதம்பரம் தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 5-ல் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் சிதம்பரத்தை ஜூன் 10-ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தது.
இந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணை (ஜூலை 10) நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்தது. அந்த அடுத்த கட்ட விசாரணையில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி சிதம் பரத்தைக் கைது செய்ய தடை விதித்து அமலாக்கத்துறைக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தை அமலாக்கத்துறையும், சிபிஐயும் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாத நிலையில் இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்து, தொடர்ந்து தடை விதித்து, தடை விதித்து, நீதிமன்றம் தொடர்ந்து தடை விதித்து உத்தரவுகளை பிறப்பித்து வந்தது.
இந்நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட தடை மே 30 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று தில்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை நான்கு ஆண்டுகளாக இழுத்தடிக்கப் பட்டு வருவதும், மோசமான நிதி முறைகேடுகளைச் செய்தார் என்று மக்கள் பலரும் நம்பிக் கொண்டிருக்கும் ப.சிதம்பரத்துக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கும் உதவும் வகையில் குறிப்பிட்ட நீதிமன்றம் இவ்வாறு தொடர்ந்து கைது செய்யத் தடை விதித்துக் கொண்டிருப்பதும் பொதுமக்களுக்கு சந்தேகத்தை மேலும் அதிகப் படுத்தியுள்ளது.