தம்லுக் : ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டால், சிறையில் தள்ளும் அளவுக்கு இருக்கிறது மம்தா பானர்ஜியின் மேற்கு வங்க அரசு என்று சாடினார் பிரதமர் மோடி. மேலும், போனி புயலை வைத்துக் கூட மம்தா அரசியல் செய்கிறார் என கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் பிரதமர் மோடி, போனி புயலில் கூட மம்தா அரசியல் செய்கிறார் என்றார். முன்னதாக, இன்று காலை ஒடிசாவில் போனி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர், மேற்கு வங்க மாநிலத்திற்கு தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றார் பிரதமர் மோடி. அங்கு, தம்லுக் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், மம்தா, போனி புயலில் கூட அரசியல் செய்கிறார். புயல் விவரங்களை கேட்டறிய அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் அகந்தை காரணமாக அவர் என்னுடன் பேச மறுத்து விட்டார். மீண்டும் அவருடன் பேச முயற்சித்தேன். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
அண்மைக் காலமாக மம்தா கடும் விரக்தியில் உள்ளார். அவர் கடவுளைப் பற்றிக் கேட்கவும் விரும்பவில்லை. அதனால் தான் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற மந்திரத்தை ஜபிப்பவர்களை மம்தா கைது செய்து, சிறையில் அடைத்து வரும் சூழல் உள்ளது என்றார்.
Great euphoria at Tamluk. Watch my speech. https://t.co/NKtL1Kvzr2
— Chowkidar Narendra Modi (@narendramodi) May 6, 2019