உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றது என்று நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தில் பணி புரிந்த பெண் பணியாளர் ஒருவர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது திடீரென பாலியல் புகார் அளித்தார். அந்தப் புகார் குறித்து விசாரணை நடத்த நீதிபதிகள் பாப்தே, இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா ஆகிய 3 பேர் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப் பட்டது.
அந்த விசாரணைக் குழுவின் முன் ஆஜரானார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்! தன் மீதான பாலியல் புகார்கள் போலியானவை என்று விளக்கம் அளித்தார். நீதித்துறையை மிரட்ட சதித்திட்டம் தீட்டப்படுவதாகவும் ரஞ்சன் கோகோய் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இந்த விசாரணைக் குழுவில் விசாரணையில் தனக்கு நீதி கிடைக்காது என்று கூறி, இந்த விசாரணையில் ஆஜராவதில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று கூறினார், பாதிக்கப் பட்டதாகக் கூறிய பெண். இந்த நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராகக் கூறப் பட்ட குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றது என்று கூறி, நீதிபதிகள் குழு இந்தப் புகாரை நிராகரித்தது. மேலும், விசாரணைக் குழுவின் அறிக்கையை வெளிப்படையாக வெளியிட இயலாது என்றும் அந்தக் குழு தெரிவித்தது. இதை அடுத்து, தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப் பட்டதாகக் கூறப் பட்டது.