உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத்தை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு மேகொண்டார்.
நாடு முழுவதும் இன்று மக்களவைக்கான இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் மாலையுடன் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது. அதற்கு சற்று முன்னர், செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டு, பின்னர்,தனது இரு நாள் ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கிவிட்டார் பிரதமர் மோடி.
தனக்கு மிகவும் விருப்பமான இமயமலையின் ஜோதிர்லிங்கத் தலமான கேதார்நாத்துக்கு பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து இன்று காலை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத்துக்கும் சென்று வழிபட்டார் பிரதமர் மோடி!
பாரம்பரிய உடை அணிந்து, பத்ரிநாத் கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள ஆன்மிக அதிர்வலைகள் நிறைந்த பகுதியில் நின்று தியானித்தார்.
முன்னதாக, நேற்று கேதார்நாத் கோவிலுக்கு அருகே இரு கி.மீ., தொலைவில் உள்ள குகைக்கு நடந்தே சென்ற பிரதமர் மோடி அங்கே இரவு முழுதும் தியானத்தில் இருந்தார். இன்று காலை தியானம் முடிந்து குகையை விட்டு வெளியில் வந்த மோடி பின்னர் கேதார்நாத்தில் கோவிலுக்கு வெளியே திரண்டிருந்த பக்தர்களை பார்த்து கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்!
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து தன் எண்ணத்தை வெளிப்படுத்திய மோடி, தன்னை இரு தினங்கள் ஆன்மிக சுற்றுலாவுக்கு அனுமதித்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் பத்ரிநாத் பத்ரிநாராயணர் கோவிலுக்குச் சென்ற மோடி, அங்கே ஸ்ரீவிஷ்ணு கோவிலில் பூஜை செய்தார். பின்னர் தனது டிவிட்டர் பதிவில்,
நாட்டின் அடையாளமாகத் திகழும் பத்ரிநாதர் கோவில் நம் பண்பாடு மற்றும் கலாசாரத்தில் மிகவும் முக்கியமான அங்கமாகத் திகழ்கிறது. இந்தக் கோயிலில் இன்று நடைபெற்ற பூஜையில் பங்குபெற்றேன்… என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.