பிரார்த்தனை, ஜெபம், விரதம் தியானம், தவம் இவற்றிற்கான வேறுபாடுகள் அறியாத பதிவுகளைப் பார்க்கிறேன். இவை எல்லா மதங்களிலும் பின்பற்றப்படுகின்றன
ஒரு சில மணித்துளிகள் வழிபாடு செய்வது பிரார்த்தனை. சிலர் தங்களது தேவைகளை இறைவனிடம் முறையிடுவது பெரும்பாலும் இந்தத் தருணத்தில்தான். பிரார்த்தனைகளுக்குப் பலனுண்டு என்பதை நான் கண்டிருக்கிறேன். குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி பிரார்த்தனையில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.
ஒரே நேரத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் இருப்பவர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்ய ஏதுவாக பிரார்த்தனை கிளப் என்ற பகுதியை வாரம் தோறும் வெளியிட்டு வந்தார்.
வெள்ளிக் கிழமை மாலை குமுதம் அலுவலகத்தில் ஆசிரியர் குழுவினர் கூடிப் பிரார்த்திப்போம். எங்கள் பிரார்த்தனை திருக்குறள் வாசிப்பில் தொடங்கும்
ஒருமுறை தனிப்பேச்சில் எப்படி பிரார்த்தனை செய்வது என்பதைப் பற்றி என்னிடம் சொன்னார்.
முதல் சில நிமிடங்கள் நமக்காக;பின் சில நிமிடங்கள் நம்மைச் சுற்றியிருப் போருக்காக(சுற்றம், நட்பு, சகாக்கள்) இறுதி நிமிடங்கள் உலகிற்காக.எல்லோரும் இன்புற்றிருப்பதுவேயல்லாமல் வேறொன்றியேன் பராபரமே என்றோ சர்வஜன சுகினோ பவந்து என்றோ அல்லது எளிமையாக சாந்தி சாந்தி சாந்திஹி என்றோ முடிவது நல்லது
ஜெபம் என்பது ஒரு மந்திரத்தை அதன் அதிர்வலைகளை உருவாக்கும் பொருட்டு இடைவிடாது ஒலித்தல்.சொல்லுக்கு அதிர்வுண்டு என்ற நம்பிக்கையோடு இதைச் செய்ய வேண்டும் மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்ப்ம் என்கிறான் மகாகவி
தியானம் என்பது உள்முகப் பயணம். சிந்தனை, விசாரணை, உரையாடல் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். புற உலகைத் துண்டித்துக் கொண்டு தன்னுள்ளே உரையாடல். இதை நான் செய்வதுண்டு. என் இளம் பருவத்தில் நான் திசைகள் ஆசிரியராகப் பொறுப்பேற்றபோது இதைச் செய்யுங்கள் உங்களுக்கு எனர்ஜி கிடைக்கும் என வழிகாட்டியவர் தி.ஜானகிராமன்
யோகம் என்பது உடலைக் கட்டுதல். அதன் வழியே மனதைப் பழக்குதல்
தவம் என்பது ஓற்றை இலக்கைக் குறி வைத்து நம் எனர்ஜி முழுவதையும் எய்தல்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்.
– மாலன், மூத்த பத்திரிகையாளர்