ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.12 கோடி….! ஆனால் சாரதா பீடத்திற்கு ஒரு ரூபாய்க்கே அளித்திருக்கிறார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்!
விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ சாரதா பீடம் என்றால் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு எவ்வளவு அதீத அன்பு என்பதை சொல்லத் தேவையில்லை. தெலங்கானா தேர்தலுக்கு முன்பு சொரூபானந்த சரஸ்வதி சுவாமி தலைமையில் ராஜ ஷ்யாமளா யாகம் நடைபெற்றது. எல்லாம் கேசிஆர்., மீண்டும் முதல்வராக வர வேண்டுமென்ற ஆசிகளுடன் தான்!
தற்போது அதற்கு கைமாறாக, சாரதா பீடத்திற்கு இரண்டரை ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது தெலங்கானா அரசு! 12 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஒரு ரூபாய்க்கு அளித்துள்ளது மாநில அரசு! சாரதா பீடத்தின் கோரிக்கையை செவிமடுத்த கேசிஆர் தீர்மானம் நிறைவேற்றி அளித்திருக்கிறார்.
ஹைதராபாதில் தம் நிகழ்ச்சிகளை விரிவுபடுத்துவதற்காக நிலம் தேவை என்று விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஸ்ரீசாரதா பீடம் மாநில முதல்வரிடம் விண்ணப்பித்தது. அதனை ஏற்றுக்கொண்ட தெலங்கானா அரசு இரண்டு ஏக்கர் 34 சென்ட் நிலத்தை சாரதா பீடத்திற்கு அளித்துள்ளது.
ரங்காரெட்டி மாவட்டம் கண்டிப்பேட் மங்கலம் கோக்காபேட்டை கிராமத்தில் நிலத்தை ஒதுக்கி அரசு சனிக்கிழமை அரசு உத்தரவு வெளியிட்டது. இதற்கு பெயரளவில் விலை ஒரு ரூபாய் என்று நிர்ணயித்தது. ஆனால் இதன் மதிப்பு ஒரு ஏக்கர் ரூ.12 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறுகிறார்கள்.
கோகாபேட்டை கிராம சர்வே எண் 240 இல் நிலத்தை ஒதுக்கி அரசு உத்தரவு, எம் எஸ் நம்பர் 71ஐ தெலங்கானா அரசு வெளியிட்டுள்ளது. அரசு உத்தரவில் குறிப்பிட்டுள்ள விவரங்களின்படி சாரதா பீடத்தின் தலைமையில் வேத பாடசாலை, வேத கோஷ முழக்கம், கோவில், சம்ஸ்கிருத பாடசாலை, மாணவர்களுக்கு தங்குமிடம், சமூக நல அரங்கம் இவை அமைப்பதற்காக தமக்கு நிலம் ஒதுக்கித் தரும்படி ஸ்ரீ சாரதா பீடம் தர்மாதிகாரி ஜி. காமேஸ்வர சர்மா 2015, 2018லும் தொடர்ந்து, இந்த மாதம் 22ம் தேதியும் அரசிடம் விண்ணப்பம் மேல் விண்ணப்பமாக அளித்தார்.
அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த கேசிஆர் ராவ் அரசு, முதன்மைச் செயலரிடம் இருந்து முதல்வருக்கு அனுப்பப் பட்ட பரிந்துரையை ஏற்று, இரண்டு ஏக்கர் நிலத்தை அளிக்க கே.சி.ஆர். ராவ் ஒப்புதல் அளித்துள்ளார்.
கோகாபேட்டை கிராமத்தில் சர்வே நம்பர் 240ல் 316.04 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. தற்போது ஹைதராபாத் முனிசிபல் டெவலப்மெண்ட் அதாரிடி வசம் உள்ளது அந்த இடம். அதே லே அவுட்டில் காலியாக இருந்த 2.34 ஏக்கரை சாரதா பீடத்திற்கு அளிப்பதற்காக ஹெச்எம்டிஏ விடமிருந்து அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.
முதல்வர் சந்திரசேகர ராவுக்கு சாரதா பீடத்தின் மீதும் பீடாதிபதி சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி மீதும் விசுவாசம் மிக அதிகம். இரண்டாவது முறை தாம் வெற்றி பெற்று, ஆட்சி அமைப்பதற்கு சுவாமிகளின் ஆசிகளும் பீடத்து மக்களின் ஆதரவும் இருந்ததாக கேசிஆர் நம்புகிறார்.
கடந்த வாரம் விஜயவாடாவில் சாரதா பீட உத்தராதிகாரி பொறுப்பை ஏற்ற விழாவில் கலந்து கொண்டு சொரூபானந்த சுவாமியின் ஆசிகளைப் பெற்றார் கேசிஆர். அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் நடந்த கேபினட் கூட்டத்தில் சாரதா பீடத்திற்கு தெலங்கானாவில் நிலம் ஒதுக்குவதாக முடிவெடுத்தனர்.
சொரூபானந்த சரஸ்வதிக்கு அளித்தது போல், தெலங்கானா திரைப்பட இயக்குனர் என்.ஷங்கருக்கு ஸ்டூடியோ கட்டுவதற்காக மோகிள்ள என்ற இடத்தில் 5 ஏக்கர் நிலம் கொடுப்பதாகவும் கேபினட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.