ஐ.நா., வில் பாதுகாப்பு சபை (நிரந்தரமற்ற) உறுப்பினர் பதவிக்கு இந்தியாவை பாகிஸ்தான் உள்ளிட்ட 55 நாடுகள் ஆதரித்துள்ளன. குறிப்பாக பாகிஸ்தானும் ஆதரவு தெரிவித்துள்ளது, அந்நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் முக்கியமான அரசியல் விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்ற அமைப்பான பாதுகாப்பு சபையில், வீட்டோ அதிகாரம் படைத்தவையாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன.
இதை அடுத்து, நிரந்தரம் அற்ற உறுப்பினர்களாக, 15 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு செயல்படுகிறது. இதில், ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தற்காலிக உறுப்பினர்களாக ஐந்து நாடுகளை தேர்வு செய்வது வழக்கம்.
10 தற்காலிக உறுப்பினர்களில் 5 நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியேறி, புதிய நாடுகள் இணையும். அவை, அடுத்த 2 ஆண்டுகளுக்கு உறுப்பினர் பதவியை வகிக்கும்.
தற்போது, வரும் 2021 – 22ம் ஆண்டில் ஆசிய-பசிபிக் நாடுகள் சார்பில் இந்த இடத்தைப் பெறுவதற்கு இந்தியா முயற்சி மேற்கொண்டது. அதற்கு பாகிஸ்தான் உள்ளிட்ட 55 நாடுகள் ஆதரவு அளித்துள்ளதாக, ஐ.நா.வில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாகவும் தூதராகவும் பணியாற்றும் சையத் அக்பருதீன் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது டிவிட்டர் பதிவில் இது தொடர்பில் ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார்.
A unanimous step.
Asia-Pacific Group @UN unanimously endorses India’s candidature for a non-permanent seat of the Security Council for 2 year term in 2021/22.
Thanks to all 55 members for their support. ???????? pic.twitter.com/ekNhEa19U1
— Syed Akbaruddin (@AkbaruddinIndia) June 26, 2019
இந்தியாவுக்கு ஆதரவாக, 55 ஆசிய-பசிபிக் நாடுகள் ஆதரவு தர முன்வந்துள்ளன. ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், சீனா, இந்தோனேசியா, ஈரான், ஜப்பான், குவைத், கிர்கிஸ்தான், மலேசியா, மாலத்தீவு, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, சிரியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், வியட்நாம் உள்பட ஆசியா-பசிபிக் பகுதியை சேர்ந்த 55 நாடுகளும் ஒருமனதாக முன்வந்துள்ளதாக சையத் அக்பருதீன் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஏற்கெனவே ஐ.நா.,வில் நிரந்தரம் அல்லாத உறுப்பினர் பதவியில், இந்தியா ஏழு முறை (1950-51, 1969-70, 1972-73, 1977-78, 1984-85, 1991-92, 2011-12) பதவி வகித்துள்ளது.
2021- 22ஆம் ஆண்டுக்கான 5 உறுப்பினர் பதவிக்கான தேர்தல், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறுகிறது.