உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், தனது கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, இலங்கையை அசத்தலாக வெற்றி கொண்டது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்தது இலங்கை அணி. இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்களைத் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர் இந்திய பந்து வீச்சாளர்கள். இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கருனரத்னே 10 ரன்னிலும், குசல் பெரேரா 18 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அவிஷ்கா பெர்னாண்டோ 20 ரன், குசல் மெண்டிஸ் 3 ரன் என சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். இருப்பினும் 5 வது விக்கெட்டுக்கு மேத்திவ்ஸ், திரிமன்னே இணை நன்கு ரன்கள் சேர்த்தது.
மேத்திவ்ஸ் 113 ரன் எடுத்தார். திரிமன்னே 53 ரன் எடுத்தார். தனஞ்சய டி சில்வா 29 ரன் எடுத்தார். 50 ஓவர் நிறைவில் இலங்கை அணி, 7 விக்கெட்களை இழந்து 264 ரன் எடுத்தது.
தொடர்ந்து 265 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே அடித்து விளையாடத் தொடங்கியது.
தொடக்க வீரராகக் களம் இறங்கிய இந்திய வீரர் ரோஹித் ஷர்மா சதம் அடித்து அசத்தினார். இந்தத் தொடரில் அவர் அடிக்கும் 5வது சதம் இதுவாகும். அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக அடுத்து அடுத்து 3 ஒரு நாள் போட்டியில் சதம் அடித்து, உலகக் கோப்பை தொடரில் ஹட்ரிக் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றார்.
ரோஹித் சர்மா 94 பந்துகளில் 2 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 103 ரன் குவித்தார். அவருக்கு ஈடு கொடுத்து லோகேஷ் ராகுல் 118 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 111 ரன் குவித்தார். இரு தொடக்க ஆட்டக்காரர்களுமே சதம் அடித்து அசத்தினர்.
தொடர்ந்து வந்த விராட் கோலி 34 ரன் எடுத்தார். ரிஷப் பந்த் 4 ரன்னில் ஆட்டம் இழந்த போதிலும் ஹர்திக் பாண்ட்யா 7 ரன் எடுக்க இந்திய அணி, 43.3 ஓவரில் 3 விக்கெட் இழந்து 265 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.