முதல்வர் குமாரசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ்பெறப் போவதாகவும் தாம் பாஜக., ஆட்சி அமைந்தால் ஆதரவளிக்கப் போவதாகவும் கடிதத்தை அளித்துள்ளார் சுயேச்சை எம்.எல்.ஏ., நாகேஷ்.
கர்நாடகாவில் ராஜினாமா செய்யும் எம்எல்ஏ.,க்களின் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆளும் குமாரசாமி அரசுக்கு சிக்கல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அனைத்து அமைச்சர்களும் தற்போது அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். இது அமைச்சரவையை மாற்றி அமைப்பதற்கான ஏற்பாடு என்று கூறப்பட்டாலும், இதனால் அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது.
கர்நாடகாவில் ஆளும் கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின்எம்எல்ஏ.,க்கள் 13 பேர் அவைத்தலைவர் ரமேஷ்குமாரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனர்.
அவர்களின் ராஜினாமா கடிதத்தின் மீது ஜூலை 9 நாளை முடிவு செய்யவுள்ளதாக, அவைத்தலைவர் கூறியுள்ளார். இதனால் அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் தற்போது மும்பையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தி ராஜினாமாவை திரும்பப் பெற வைக்கும் முயற்சியில் காங்கிரஸ், மஜத கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பி உள்ள முதல்வர் குமாரசாமி, தேவகவுடா, சித்தராமைய்யா உள்ளிட்ட தலைவர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏ.,க்களுடன் 2 நாட்களாக பேச்சு நடத்தியும், அவர்கள் ராஜினாமாவை திரும்ப பெற முடியாது என தெரிவித்து விட்டனர். இதனால் அரசுக்கு மேலும் நெருக்கடி முற்றி வருகிறது.
இந்நிலையில் சுயேட்சை எம்எல்ஏ., நாகேஷ் தனது ஆதரவை வாபஸ் பெறுவதுடன், பாஜக., ஆட்சி அமைந்தால் அதற்கு ஆதரவளிக்கப் போவதாக ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் கடிதம் கொடுத்துள்ளார். தாம் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமாசெய்வதாகவும், ஏற்கெனவே அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.



