ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தின் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் நாளை அதிகாலை 2.51க்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.
நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக ஜிஎஸ்எல்வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான 20 மணி நேர கவுண்ட் டவுன் இன்று காலை தொடங்கியது. விண்ணில் ஏவிய 16 நிமிடங்களில் புவி சுற்று வட்டப் பாதையில் சந்திரயான்-2 செலுத்தப்படும்.
அதன் பிறகு, நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு விண்கலம் மாறும். அந்தப் பாதையில் 45 நாட்கள் பயணித்து செப்டம்பர் 6-ஆம் தேதி அது நிலவைச் சென்றடையும்.
சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படுவதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில் பார்வையிடுகிறார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஆந்திர ஆளுநர் நரசிம்மன், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோரும் நேரில் பார்வையிடுகிறார்கள்.
சந்திரயான் 2 ஏவும் நிகழ்ச்சியை ஸ்ரீஹரிகோட்டாவில் பொதுமக்கள் பார்வையிடுவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சந்திரயான் – 1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை இது குறித்து ஊடகங்களில் பேசிய போது, நிலவு குறித்த ஆய்வில் சந்திரயான் உலகத்திற்கே முன்னோடியாக உள்ளது; மனிதன் செல்ல நீண்ட நாட்களாகும் என்பதால் தொழில்நுட்பம் மூலம் நிலவை ஆய்வு செய்ய முடியும்!
பூமியைவிட மாறுபட்ட ஈர்ப்புவிசை உள்ள நிலவில் ஆய்வு செய்வது சவாலான பணியாகும்; சந்திரயான் – 2 ரோவர் வாகனத்தை இறக்கி சோதனை செய்ய சேலம் பகுதியிலிருந்து மாதிரி மண் பெறப்பட்டது!
ஒரு மாதத்தில் 14 நாட்கள் மட்டுமே நிலவில் விண்கலன்கள் தரையிறங்க முடியும்! முழு நிலவையும் ஆய்வு செய்ய துருவ வட்டப்பாதையில் தான் செல்ல முடியும்; துருவ வட்டப்பாதையில் நிலவை சென்றடைவது என்பது மிகவும் சவாலான பணியாகும் என்று கூறினார்.