குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனைக்கு தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.
குல்பூஷன் ஜாதவ் வழக்கின் தீர்ப்பை பாகிஸ்தான் நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ள சர்வதேச நீதிமன்றம், வழக்கை மீண்டும் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
குல்பூஷன் ஜாதவ் ஈரானில் இருந்து வந்தபோது பாகிஸ்தானின் பலூஜிஸ்தான் மாகாணத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப் பட்டதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால், ஈரானுக்கு தொழில் ரீதியாக அவர் சென்றபோது, அங்கிருந்து அவரை பாகிஸ்தான் கடத்தியுள்ளதாக இந்தியா கூறியது.
இந்நிலையில், பாகிஸ்தானின் ராணுவ நீதிமன்றம் கடந்த 2017 ஏப்ரலில் குல்பூஷன் ஜாதவை, இந்தியாவின் உளவாளி என்று கூறி மரண தண்டனை வழங்கியது. இது, இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து 2017 மே மாதத்தில், சர்வதேச நீதிமன்றத்தை அணுகிய இந்திய அரசு, குல்பூஷன் ஜாதவை கைது செய்தது தொடர்பாக நீண்ட நாட்களாக தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று கூறியது.
குல்பூஷன் ஜாதவுக்கு தூதரக ரீதியிலான உதவிகளைச் செய்ய மறுத்ததன் மூலம் வியன்னா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா கண்டனம் தெரிவித்தது.
இதை அடுத்து 10 நீதிபதிகள் அடங்கிய சர்வதேச நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு அளிக்கும் வரையில் குல்பூஷன் ஜாதவுக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று தெரிவித்தது. அதன்படி, இன்று அது தீர்ப்பு வழங்கியது.
குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பை சர்வதேச நீதிமன்றம் வழங்கியுள்ளது. பாகிஸ்தான் வழங்கிய மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
குல்பூஷண் ஜாதவிற்கு தூதரக உதவியை அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச நீதிமன்ற உத்தரவு காரணமாக இனி அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது. இது மோடி அரசுக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதப் படுகிறது.
இதற்கிடையே தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.