இனி ரயில்களில் அன்ரிசர்வ் பெட்டிகளில் ‘சீட்’ ரிசர்வ் செய்யலாம்..! ரயில்வேயின் புதிய திட்டம் – எப்படி சாத்தியம் ஆகும்?
முன்பதிவு செய்யாமல் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு உதவும் வகையில் இந்திய ரயில்வே புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
திடீரென்று திட்டமிடும் பயணங்கள் எப்போதுமே சிரமத்தைக் கொடுப்பதுதான்! அதுவும், நாம் ரயில்களில் முன்பதிவு செய்யாமல், பொதுப்பெட்டியில் ஏறி பயணம் செய்யலாம் என்று நினைப்பதும், அதன்படி பயணம் செய்ய முற்படும் போது சந்திக்கும் சிரமங்களும் மிக அதிகம்.
புறப்படும் ரயில் நிலையமாக இருந்தால், ரயில் புறப்படுவதற்கு பல மணி நேரம் முன்னரே ரயில் நிலையம் வந்து பொது பெட்டியில் இடம்பிடிக்க காத்திருந்து இடம் கிடைக்காமல் போன சோக சூழலும் பலருக்கு ஏற்பட்டிருக்கும். ஆனால், ரயில் வந்து செல்லும் நிலையமாக இருந்தால், பொதுப் பெட்டியில் பயணம் செய்ய வாசலில் கால் வைக்கவே இடமிருக்காது பல நேரங்களில்!
இந்நிலையில் இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்திய ரயில்வே துறை புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக, முன்பதிவு செய்யாமல் பயணம் செல்பவர்களுக்கு உதவும் வகையில் பயோமெட்ரிக் திட்டத்தை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது.
முன்பதிவு செய்யாத பயணிகளுக்கும் இடங்களை உறுதி செய்வதற்காக பயோமெட்ரிக் அடையாள முறையை அமல்படுத்தியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்படி, பயணிகள் பயோமெட்ரிக் இயந்திரத்தில், டிக்கெட் வாங்கியதும் தங்கள் கைரேகைகளை பதிவு செய்ததும் டோக்கன் ஒன்று வழங்கப்படும்.
அந்த டோக்கன்களில் உள்ள வரிசை எண்படி பயணிகள் நிறுத்தப்பட்டு, ரயில்வே காவல்துறையினர் டோக்கன்களை பரிசோதித்த பின் பயணிகள் பெட்டிக்குள் ஏற்றப் படுவார்கள். முதலில் வந்து டோக்கன் பெறுபவர்களுக்கே முன்னுரிமைப் படி சீட் கிடைக்கும்.
இதனால், பயோமெட்ரிக் இயந்திரத்தில் பதிவாகும் கைரேகைகள் மூலம் திருடர்கள் அடையாளம் காணப்படுவார்கள்!
இந்தத் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றாலும், வடமாநிலங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப் படுவது சாத்தியமானதா என கேள்வி எழுப்புகின்றனர் ஆர்வலர்கள்!