மத்திய முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்பால் ரெட்டி, தமது 77 ஆவது வயதில் காலமானார். உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட ஜெய்பால் ரெட்டி, சனிக்கிழமை நேற்று நள்ளிரவு1.28 மணிக்கு காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஜெய்பால் ரெட்டியின் மறைவுக்கு இரு தெலுகு மாநில முதலமைச்சர்களும் இரங்கல் தெரிவித்ததுடன், அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்தனர். நாட்டிற்கு ஜெயபால் ரெட்டி ஆற்றிய சேவைகள் மறக்க இயலாதவை என்று அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
ஜெய்பால் ரெட்டி மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு என்று தெலங்கானா காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி தெரிவித்தார். ஜெய்பால் ரெட்டி மனிதாபிமானம் உள்ளவர் என்று அவர் புகழ்ந்தார்.
அரசியல் வட்டாரத்தில் மூத்த தலைவராக பெயர் பெற்ற ஜெய்பால் ரெட்டி நான்கு முறை எம்எல்ஏவாகவும் ஐந்து முறை எம்பியாகவும் இருந்தவர். உடல்நிலை சரியில்லாமல் ஜூலை 20-ஆம் தேதி ‘கச்பௌலி’ ஏஷியன் gastroenterology மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
முன்னாள் பிரதமர்கள் ஐ.கே.குஜ்ரால், மன்மோகன் சிங் ஆகியோரின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பணியாற்றியுள்ளார். 1980 இல் இந்திரா காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோற்றவர் ஜெய்பால் ரெட்டி.
அரசியலில் அமைதியானவர் என்று பெயர் எடுத்தவர் ஜெய்பால் ரெட்டி. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 1998ல் சிறந்த பார்லிமென்டேரியனாக தேர்வு பெற்றவர் ஜெய்பால் ரெட்டி.
1969 இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து முதல் முறை மகபூப் நகர் கல்வகுர்த்தி தொகுதியில் நின்று வென்றவர், பின்னர் நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார். எமர்ஜென்சியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி 1977இல் ஜனதா கட்சியில் இணைந்தார். 1980இல் இந்திரா காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோற்றார்.
1984இல் மெகபூப் நகர் மக்களவைத் தேர்தலில் வென்றார். அதன்பின் 1998 1999, 2004, 2009 தேர்தல்களில் மக்களவைக்குத் தேர்வானார்.
ஐ.கே.குஜரால் அமைச்சரவையில் மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராகவும் மன்மோகன் சிங் அமைச்சரவையில் கலாச்சாரத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார் ஜெய்பால் ரெட்டி.