அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ராக் லேண்ட் நகரைச் சேர்ந்தவர், 39 வயதான ஜுவான் ரோட்ரிக்ஸ். இவருக்கு, மரிசா என்ற மனைவி, 4 வயதில் ஒரு மகன், லூனா மற்றும் போனெக்ஸ் என்ற ஒரு வயதாகும் இரட்டைக் குழந்தைகள் இருந்தனர். இருவரும் வேலைக்குச் செல்லுவதால் இவர்கள், தினமும் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பு மையத்தில் விட்டுவிட்டுச் செல்வார்கள்.ஜுவான், அங்குள்ள ஒரு மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தன் மூன்று குழந்தைகளையும் காரில் ஏற்றிக் கொண்டு சென்ற ஜுவான், 4 வயது மகனை ஒரு மையத்தில் விட்டுவிட்டு நேராக தன் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். தன் இரட்டைக் குழந்தைகள் காரின் பின் இருக்கையிலிருந்ததை மறந்துவிட்டார். பின்னர், பணி முடிந்த பிறகு எப்போதும் போல காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்லும் வழியில், எதேச்சையாகப் பின் இருக்கையைப் பார்த்த ஜுவானுக்கு பெரும் அதிர்ச்சியடைந்தார்.
பின் இருக்கையில் இருந்த 2 குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியபடி பேச்சுமூச்சு இல்லாமல் படுத்திருந்துள்ளன. அதைப் பார்த்ததும் பதறிய ஜுவான், உடனடியாக காவலர்களுக்கு போன் செய்து உதவி கேட்க, இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள், குழந்தைகளைப் பரிசோதித்துவிட்டு, இருவரும் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து நடந்த மருத்துவ சோதனையில், எட்டு மணி நேரமாகக் குழந்தைகள் காரில் இருந்ததால், அந்த வெப்பம் தாங்காமல் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, குழந்தைகளின் தந்தையைக் காவலர்கள் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். விசாரணையில் பேசிய ஜுவான், ” நான் வேலைக்குச் செல்லும் முன்பு குழந்தைகளைப் பாதுகாப்பு மையத்தில் விட்டதாகவே தோன்றியது. முற்றிலும் வெறுமையாக உணருகிறேன். என் குழந்தைகள் இறந்துவிட்டன. நானே அவர்களைக் கொன்றுவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.செய்தியாளர்களிடம் பேசிய ஜுவானின் மனைவி மரினா, ” நடந்த சம்பவங்கள் எனக்கு கெட்ட கனவு போன்றவை. குழந்தைகள் இறந்துவிட்டார்கள் என்பதை இன்னும் நம்பமுடியவில்லை. அவர்களின் இனிமையான நிகழ்வுகள் என் மனத்தில் பதிந்துள்ளன. நான் நினைத்ததைவிட அதிகமாகக் காயமடைந்துள்ளேன். இன்னும் என் கணவரைக் காதலிக்கிறேன். அவர் ஒரு நல்ல தந்தை. எங்கள் குழந்தைகளைத் துன்புறுத்தும் வகையில் அவர் எந்த ஒரு காரியத்தையும் செய்ய மாட்டார். என்னால் இந்த இழப்பிலிருந்து மீண்டு வரமுடியாது. என் கணவரும், அவர் செய்த தவறுக்கு அவரை மன்னித்துக்கொள்ள மாட்டார் என எனக்குத் தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ப்ரான்க்ஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜுவான் மீதான வழக்கு விசாரணை முடிந்த நிலையில், அவருக்கு ஒரு லட்சம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.