இன்று நீண்ட நேர விவாதத்துக்குப் பின்னர், நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் முத்தலாக் தடைச் சட்ட மசோதா நிறைவேறியது. இதை அடுத்து, இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்திய இஸ்லாமிய சமூகத்தில் மூன்று முறை ‘தலாக்’ கூறி விவாகரத்து பெறும் முறையை குற்றமாக்கும், முத்தலாக் தடைச் சட்ட மசோதா முன்னதாக நாடாளுமன்ற மக்களவையில் ஜூலை 25ஆம் தேதி நிறைவேறியது. அதைத் தொடர்ந்து இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
முத்தலாக் தடைச் சட்ட மசோதாவை தாக்கல் செய்து, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில்; முத்தலாக் தடைச் சட்ட மசோதா, மனிதநேய எண்ணம் கொண்டது! இந்த மசோதா நீதிக்கானது, மத ரீதியிலானது அல்ல. இதனை யாரும் அரசியலாக்க வேண்டாம். இஸ்லாமியப் பெண்களின் மாண்பையும், அவர்களது அதிகாரத்தையும் நிலைநிறுத்தக்கூடியது இந்தச் சட்ட மசோதா என்று பேசினார்.
மாநிலங்களவையில் கொண்டு வரப்பட்ட முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு – 99, எதிர்ப்பு – 84 என வாக்குகள் பதிவாயின. முன்னதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் இட்டன.
இந்நிலையில், முத்தலாக் தடைச்சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.
முத்தலாக் மசோதா அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று, எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் கூறினார். இஸ்லாமியர்களின் தனிநபர் சட்டத்துக்கு எதிரானது என்றும் நாங்கள் கூறிய மாற்றங்களை அரசு ஏற்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னர், நாடாளுமன்ற மக்களவையில் இந்தச் சட்ட மசோதா தாக்கலான போது, அதிமுக.,வின் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார், இந்தச் சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் முத்தலாக் சட்டம் கடந்த மோடி ஆட்சியின் போதே கொண்டு வரப்பட்டு, மாநிலங்களவையில் பலம் இல்லாத நிலையில் நின்று போனது. ஆனால் இந்த முறை மோடி அரசு அதனை சாதித்துக் காட்டியுள்ளது.


