
கர்நாடகாவில் நான்காவது முறையாக முதல்வர் ஆன பின்னர், எடியூரப்பா அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இனி திப்பு சுல்தான் ஜெயந்தி அரசு விழாவாக நடக்காது என்பதுதான் அந்த அதிரடி.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் திப்பு சுல்தான் பிறந்த நாளை, திப்பு ஜெயந்தி என்று கூறி, கர்நாடக மாநில அரசு, அதனை அரசு விழாவாகவே கொண்டாடி வருகிறது. இதை எதிர்த்து பாஜக., பலமாகப் போராடியது. நீதிமன்றத்தில் வழக்குகள் கூட பதியப் பட்டன.
மைசூர் ராஜ்ஜியத்தைச் சேர்ந்த திப்பு சுல்தான், 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஹைதர் அலியின் மகனான திப்பு சுல்தான், மைசூர் ராஜ்ஜியத்தினை கபளீகரம் செய்தவர். ஆங்கிலேயர் தனக்கு எதிராகப் போரிட வந்த போது, தன் ராஜ்ஜியத்தைக் காப்பதற்காக போரிட்டு, ஸ்ரீரங்கபட்டணத்தில் உயிரிழந்தவர். இருப்பின், அவர் இந்திய சுதந்திரத்துக்காக போராடியவர் என்றும், ஆங்கிலேயருக்கு எதிரான 4வது ஆங்கிலோ- மைசூர் போரில் அவர் உயிரிழந்தார் என்பதால், அவருக்கு அரசு விழா எடுப்பதில் தவறில்லை’ என்றும் அப்போதைய காங்கிரஸ் அரசு கூறியது.
இந்நிலையில், காங்கிரஸ் அரசின் முடிவுக்கு பாஜக., கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ‘கொடூரமான முறையில், முஸ்லிம்கள் அல்லாத மக்களைக் கொன்று குவித்தவர் திப்பு சுல்தான் என்றும், இஸ்லாத்தைப் பரப்புவதற்காக பல இந்துக்களையும் கிறித்துவர்களையும் கொன்று குவித்தவர் என்றும், இஸ்லாம் மதத்துக்கு மாறாதவர்களை ஈவு இரக்கம் இன்றி அவர் துன்புறுத்தினார் என்றும், அத்தகைய வெறுப்பு விதைத்த நபர்களை தேசியக் கண்ணோட்டத்தில் தலைவர்களாக வைத்து அரசு விழா எடுப்பது தவறு என்றும் பாஜக., கூறியது.
மைசூர் மஹாராஜாவை எதிர்த்து குடகு பகுதியில் தனது பலத்தைக் காட்டி வந்த திப்பு, மைசூர் மகாராஜாவுக்கு ஆதரவு காட்டியவர்கள் என்ற காரணத்தாலேயே, ஒரு தீபாவளி நாளில், மேல்கோட்டை எனும் திருநாராயணபுரத்தில் மண்டயம் ஐயங்கார்கள் எனும் பிராமண வகுப்பைச் சேர்ந்த பலரை வெட்டிக் கொன்றான்.
தொடர்ந்து குடகு எனப்படும் கூர்க் பகுதியில் தனது ஆதிக்கத்தையும் இஸ்லாத்தையும் பரப்புவதற்காக, ஆயிரக்கணக்கான பெண்களையும் ஆண்களையும் இஸ்லாத்துக்கு மாற்றினான். மறுத்தவர்களை கொடூரமாகக் கொன்று குவித்தான்.
ஆனால், முஸ்லீம் வாக்கு வங்கியை மனத்தில் கொண்டு, அப்போதைய காங்கிரஸ் அரசும் பின்னர் வந்த காங்கிரஸ் கூட்டணியிலான மஜத கட்சியும் திப்பு ஜெயந்தியை கொண்டாடின.
ஆயினும் பாஜக., மற்றும் இந்து இயக்கங்களின் எதிர்ப்பு தொடர்ந்தது. 2015ல் மாநிலம் தழுவிய அளவில் எதிர்ப்பு கிளம்பிய போது, குடகு மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த குட்டப்பா என்பவர் உயிரிழந்தார்.
தொடர்ந்து பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும், முன்னாள் முதல்வர் குமாரசாமி, ‘திப்பு ஜெயந்தி கொண்டாட்டங்கள் அமைதியான முறையில் நடக்கும். அதை குலைக்க நினைக்கும் நபர்கள் மீது போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்கும்’ என்று கூறினார்.
தற்போது காங்கிரஸ் கூட்டணியிலான குமாரசாமி அரசு கவிழ்ந்து புதிதாக பாஜக.,வின் எடியூரப்பா அமைந்த நிலையில், தங்களது முந்தைய போராட்டங்களுக்கு மதிப்பு கொடுக்கும் பொருட்டு, எடியூரப்பா அரசு, அரசு சார்பில் கொண்டாடப் படும் திப்பு ஜெயந்தி விழாவை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது பாஜக., தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த மகிழ்ச்சியை பலரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் கருத்துகளாக வெளியிட்டு, கொண்டாடி வருகிறார்கள்.


