ஜம்மு காஷ்மீரின் கதை முடிந்தது???
மத்திய அரசு நினைத்தால் இப்போது என்ன செய்ய முடியும்? என்ற தலைப்பில் சட்ட மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் 370 வது ஷரத்தை பாராளுமன்றத்தால் ரத்து செய்ய முடியுமா என்று தெரியவில்லை என நாம் கூறிக்கொண்டு இருந்த நிலையில் இப்போது அது தொடர்பான சில தகவல்கள் கிடைத்து இருக்கின்றன.
370 வது ஷரத்தை முற்றிலுமாக முடக்க ; திருத்தி அமைக்க ; மாற்றம் செய்ய குடியரசு தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் அவர் தன்னிச்சையாக செய்ய முடியாது . ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் சாசனத்தை வரைந்த அரசியல் சாசன சபையின் ஒப்புதலுடன் தான் செய்ய முடியும்! அந்த அரசியல் சாசன சபையே இப்போது இல்லை.
ஆனால் , 370 வது ஷரத்து தொடர்பாக குடியரசு தலைவர் எடுக்கும் முடிவுக்கு மாநில ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் 1972 ம் ஆண்டு தீர்ப்பு வழங்கி இருக்கிறது!
அரசியல் சாசன சபை இல்லாத நிலையில் அதன் அதிகாரம் ஆளுநருக்கு உரியதாகிறது என்ற அந்த தீர்ப்பு இப்போது மத்திய அரசின் விருப்பத்தை
நிறைவேற்றிக்கொள்ள வசதியாக அமைந்து இருக்கிறது.
சட்ட மன்றம் கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி நடக்கும் போது சட்ட மன்றத்தின் அதிகாரங்களை ஆளுநர் பயன்படுத்த முடியும். சட்ட பிரகடனங்களை ஆளுநர் செய்ய முடியும். அதிகபட்சம் இரண்டு ஆண்டு களுக்குள் சட்டமன்றத்தில் அந்த சட்டங்களை முறைப்படி நிறைவேற்ற வேண்டும் என்று ஜம்மு & காஷ்மீர் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப் பட்டு இருக்கிறது!
ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு 370 வது ஷரத்தில் திருத்தம் கொண்டு வந்து பட்டியல் ஜாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு தனி ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்து இருக்கிறது! அதற்கான மசோதா இன்றே கூட பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வாய்ப்பு இருக்கிறது. ஜம்மு & காஷ்மீர் அரசியல் சாசன சபையின் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது என்பதை இது உறுதி செய்யும்!
அரசியல் சாசன சபையின் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது என்பதால் 370 வது ஷரத்தை ரத்து செய்ய 35 A ஷரத்தை ரத்து செய்ய ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர் பள்ளத்தாக்கு ஜம்மு யூனியன் பிரதேசம் லடாக் யூனியன் பிரதேசம் என்று மூன்றாவதாக பிரித்து அறிவிக்க ஆளுநர் ஒப்புதல் அளிக்க முடியும்! அது போதுமானது!
சட்ட மன்றம் கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி நடந்து கொண்டு இருப்பதால் மாநில அரசின் எதிர்ப்பு என்ற சிக்கலும் இல்லை. மாநில அமைச்சரவையின் அறிவுரைப்படி தான் செயல்பட வேண்டும் என்ற நிர்பந்தம் ஆளுநருக்கும் இல்லை!
மத்திய அரசு — பாராளுமன்றம் – ஆளுநர் – குடியரசு தலைவர் ஆகிய நான்கு அதிகார மையங்களும் சுமூகமாக இயங்கி வெற்றி பெற முடியும்!
ஜம்மு & காஷ்மீர் விஷயத்தில் மோடி தலைமையிலான அரசு திடீரென்று முடிவெடுத்து இப்போது இறங்கியதாகத் தெரியவில்லை. நீண்ட காலமாக திட்டமிட்டு படிப்படியாக முன்னேறி இப்போது உச்ச கட்டத்தை எட்டி உள்ளது என்றே தோன்றுகிறது!
@ வசந்தன் பெருமாள்