கேரளத்தில் தற்போது கனமழையின் தாக்கத்தால் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட மிக மோசமான சூழலை கேரளம் கண்டு வருகிறது. கேரளம் சந்தித்து வரும் பெரும் பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் படையினருக்கு உதவியாகவும், பல இடங்களில் தனியாகவும் தன்னார்வத் தொண்டு அமைப்பினர் பொதுமக்களை மீட்பது, உதவிகள் புரிவது என்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சார்பு அமைப்பான சேவாபாரதி முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.
கேரளத்தில் பல இடங்கள் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக உயிழிழப்புகளும் அதிகரித்து வருகிறது. மண்சரிவால் கட்டடங்கள் மண்ணுக்குள் புதைவதும், வெள்ள நீரில் அடித்துச் செல்வதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை வரை கேரளாவில் மழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68-ஆனது. கடந்த முறை, சபரிமலையை ஒட்டியுள்ள பத்தனம்திட்டா மாவட்டம், கொச்சின் உள்ளிட்ட மத்திய மாவட்டங்கள் பெரும் சேதங்களைச் சந்தித்தன. இந்த முறை வட கேரளமான வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்கள் பெரும் சேதங்களைச் சந்தித்துள்ளன.
கேரள வெள்ள நிலவரம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் பிணராயி விஜயன், `இது வரை 1,550 நிவாரண முகாம்களில் சுமார் 2.25 லட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்! மீட்புப் பணிகளில்தான் அனைவரது கவனமும் இருக்க வேண்டும். இதில் அரசியல் அறவே கூடாது! இது போன்ற பேரழிவின்போது அரசியல் விருப்பங்களை வெளிக்காட்டக் கூடாது. மீட்புப் பணியின்போது தாங்கள் சார்ந்திருக்கும் இயக்கங்களின் சின்னங்களை டி சர்ட்டில் ஒட்டிக்கொள்வது, கோஷங்கள் எழுப்புவது போன்றவை ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்திய சமூக ஜனநாயகக் கட்சி, இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு, சேவா பாரதி முதலிய அமைப்புகளின் கொடிகளை டி-சர்ட்டில் காணமுடிகிறது” என்று கூறியிருக்கிறார்.
குறிப்பாக, கடந்த வெள்ள சேதத்துக்குப் பின்னர் தற்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் சரிவைச் சந்தித்தது. அப்போதும், ஆர்.எஸ்.எஸ்.ஸின் சேவாபாரதி தொண்டர்கள் பெரும் அளவில் மக்களிடம் உதவிகளைச் செய்து வந்தனர். அது குறித்து அப்போதும் தனது எரிச்சலை வெளிப்படுத்தினார் முதல்வர் பிணராயி விஜயன்.
இந்நிலையில் இந்த வருடமும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் சேவாபாரதி தன்னார்வத் தொண்டர்கள் பெருமளவில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அது தங்களுக்கு அரசியல் ரீதியாக மீண்டும் ஒரு இழப்பைக் கொண்டு வரும் என்று எரிச்சல் அடைந்துள்ள பிணராயி விஜயன், அதற்காகவே இத்தகைய வெறுப்புணர்வுக் கருத்தைத் தெரிவித்துள்ளார் என்று சர்ச்சை ஏற்பட்டுள்ளது.