அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து மோடிக்கு உதவி உள்ளோம்!

Published:

abishek manu singhvi - 2026

அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து எதிர்ப்பு தெரிவித்து மோடிக்கு உதவி செய்துள்ளோம் என்று காங்கிரஸ் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான அபிஷேக் மனு சிங்வி தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது!

முன்னதாக, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் கூறியபோது, பிரதமர் நரேந்திர மோடியின் பணிகளை அங்கீகரிக்க வேண்டிய காலம் வந்திருக்கிறது! கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை அவர் மேற்கொண்ட பணிகளால் தான் அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிகமான மக்கள் ஆதரவுடன் அவர் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளார்!

மோடி மக்களுக்கு புரியும் மொழியில் பேசுகிறார். இத்தனை ஆண்டுகளாக இருந்ததுபோல் இப்போதும் இதை நாம் சரியாக புரிந்து கொள்ளாமல் இருந்தால் எதிர்காலத்தில் அவரை சமாளிப்பது மிகவும் கடினம்!

தொடர்ந்து அனைத்து விஷயங்களிலும் மோடியை நாம் மோசமானவர் என்றே சித்திரிக்க வேண்டிய அவசியமில்லை! அதற்காக அவரை பாராட்ட வேண்டும் என்றும் நான் கூறவில்லை! அதேநேரம் நிர்வாகத்தில் அவர் செய்துள்ள மாற்றங்களை நாம் அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது! பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பது அவருடைய மக்கள் நல திட்டங்கள் தான்!

பல நல்ல திட்டங்களில் குறிப்பிடப்பட வேண்டியது- ஏழைப் பெண்களின் பெயரில் இலவச சமையல் காஸ் இணைப்பு வழங்கும் திட்டம் ஒன்று! நாம் இந்த திட்டத்தை கிண்டல் செய்து அரசியல் ரீதியாக எதிர்ப்பை தெரிவித்து வந்தோம்! ஆனால் அந்த திட்டம் பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மோடிக்கு மிகப் பெரும் செல்வாக்கை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது!

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

அதேபோல் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் விவசாயிகளின் பிரச்சினை குறித்தும் நாம் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தோம்! விவசாயிகள் பிரச்சனை ஏற்பட்டிருந்தது உண்மைதான்! அதற்காக அந்த பிரச்சினைகளுக்கெல்லாம் மோடி தான் காரணம் என்று விவசாயிகளே நினைக்கவில்லை!

மக்கள் அவரை ஏன் மதிக்கின்றனர் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்… என்று அவர் கூறியிருந்தார்!

abhishekmanusinghvi - 2026

இந்த நிலையில் மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவரான அபிஷேக் மனு சிங்வி அதை அப்படியே நகல் எடுத்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்தியில் எப்போதும் பிரதமர் மோடியை மோசமான மோசமானவை சித்திரிப்பது தவறு! அவர் நாட்டுக்கு பிரதமர் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு உதவி செய்து உள்ளோம்.

சில விஷயங்கள் நல்லதாக இருக்கும்; சில விஷயங்கள் தவறாக இருக்கும்; நம்முடைய கருத்துக்கு வேறுபட்டதாகும் இருக்கும்! இதில் நாம் பிரச்சினையைத்தான் முக்கியமாக பார்க்க வேண்டும்! தனிநபரை அல்ல!

பெண்களின் பெயரில் சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம் அவருடைய பல நல்ல திட்டங்கள் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது! என்று அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்!

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

பிரதமர் நரேந்திர மோடியை மோசமானவராகவே உருவகப் படுத்துவது தவறு என்று ஜெயராம் ரமேஷ் கூறிய நிலையில் மூத்த தலைவரான அபிஷேக் மனு சிங்வியும் அதை நகல் எடுப்பது போல் கருத்து தெரிவித்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது!

கடந்த ஐந்து ஆண்டுகளாக பாஜகவை விமர்சித்து அரசியல் நடத்திவரும் காங்கிரஸ் மோடியை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தது! காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மோடியை கடுமையாக விமர்சித்து அவரது புகழை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தி விட்டன!

இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று மோடி மீண்டும் பிரதமராக அமர்ந்தார்! இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை பாராட்டி பேசத் தொடங்கியுள்ளனர்!

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி கருத்து தெரிவித்தார்! தொடர்ந்து சசி தரூர், பின்னர் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் வரிசையாக மோடியை பாராட்டி பேசி வருகின்றனர். இது காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே காங்கிரஸில் இருந்து வெளியேறலாமா என்று பலரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில், தலைவர்களே இது போல் பேசத்தொடங்கினால் கட்சி என்ன ஆவது என்று கூறி வருகின்றனர் சிலர்!

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img