அரோஹரா கோஷம் முழங்க செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலம்: லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

Published:

tiruchendur3 - 2026

திருச்சீரலைவாய் என்று புராணங்களில் புகழப்படும் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில், ஜெயந்திநாதர் சூரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார விழா கோலாகலமாக நடைபெற்றது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணதிர லட்சக்கணக்காக பக்தர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் குழுமி, ஜெயந்திநாதரை வழிபட்டனர்.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நிகழாண்டு சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் இன்று நடைபெற்றது.

இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதிகாலை 1:30க்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை மற்றும் தொடர்ந்து கால பூஜைகள் நடைபெற்றன.

tiruchendur3 - 2026

பின்னர் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் அவரை பரவசத்துடன் தரிசித்தனர்.

மாலை 4.30க்கு செந்தூர் கடற்கரையில் லட்சணக்கான பக்தர்கள் கூடியிருக்க, கஜமுகன், சிங்கமுகன், சூரபத்மன் என அடுத்தடுத்து வலம் வந்து போரிட்ட சூரனை சுவாமி ஜெயந்திநாதர் தன் அன்னை பார்வதியிடம் பெற்ற சக்தி வேலால் சம்ஹாரம் செய்தார்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

சேவல் உருவத்தில் போரிட்ட சூரனை முருகப் பெருமான் மன்னித்து அவனைத் தன் கொடியில் ஏற்றி, சேவற்கொடியோன் எனப் பெயர் தாங்கினார். மாமரமாக மாறிய சூரனை ஆட்கொண்டார்.

tiruchendur - 2026

சூர சம்ஹாரத் திருவிழாவைக் காண கூடியிருந்த பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” வெற்றி வேல் வீர வேல் என கோஷங்களை எழுப்பி, பெருமானை வழிபட்டனர்.

ஆறு நாள் தொடர்ந்து ஆலயத்திலும் தங்கள் இல்லங்களிலும் சஷ்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள், ஆறாவது நாளான இன்று சூர சம்ஹாரம் முடிந்த கையுடன் செந்தூர் கடற்கரையில் புனித நீராடி தங்கள் விரதத்தை முடித்துக் கொண்டனர்.

tiruchendur1 - 2026

சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி-அம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவிலை சேர்கின்றனர்.

tiruchendur4 - 2026

7-ம் நாளான ஞாயிற்றுக்கிழமை நாளை இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

Related articles

Recent articles

spot_img