வேலூர்:
திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் நெஞ்சு வலி காரணமாக சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருப்பவருமான துரைமுருகன், சட்டசபையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் செயலாற்றி வருகிறார். அவருக்கு, சென்னை வரும் வழியில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், உடனடியாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இன்று காலை 5 மணியளவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து திமுக.,வினர் கூறியபோது, துரைமுருகன், உடல் நலமுடன் உள்ளதாகவும், அச்சப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை என்றும் கூறினர்.
துரைமுருகன் வேலூர் காட்பாடி தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். கடந்த நவம்பர் மாதத்தில், துரைமுருகன் சென்னை விமான நிலையத்தில் மயங்கி விழுந்தார். பின்னர், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்த 3 மாதத்திற்குள் துரைமுருகனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.