தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டது முதலே சர்ச்சைகள். அதுவும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவாளர்கள் பகிரங்கமாகவே திருநாவுக்கரசருக்கு எதிராக செயல்பட்டனர். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடங்கி அதிமுகவின் வாய்ஸாக திருநாவுக்கரசர் மாறிவிட்டது என்பதும் இளங்கோவன் தரப்பின் குற்றச்சாட்டு. தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து கொண்டே திமுக தலைவர்களின் கருத்தை நிராகரித்து பேசிவந்தார் திருநாவுக்கரசர்.
இதற்கு இளங்கோவன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இந்த ஆடுபுலி ஆட்டத்தின் உச்சமாகத்தான் திருநாவுக்கரசர் யார் என்றே தெரியாது என அதிரடி காட்டினார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
ஆனால் திருநாவுக்கரசை மாற்றும் முடிவுக்கு டெல்லி மேலிடம் வந்ததைத் தொடர்ந்துதான் இளங்கோவன் தனி ஆவர்த்தனத்தை தீவிரப்படுத்தினார் என்கின்றன காங். வட்டாரங்கள். சென்னையில் திருநாவுக்கரசரை அழைக்காமலேயே பொதுக்கூட்டமும் நடத்தினார் இளங்கோவன்.
திருநாவுக்கரசரை நியமிக்கும் முன்னர் ப.சிதம்பரத்தைத்தான் தமிழக காங். தலைவராக்க டெல்லி மேலிடம் விரும்பியதாம். ஆனால் அப்போது தமக்கு மாநில அரசியலில் விருப்பம் இல்லை என கூறி அதை நிராகரித்துவிட்டாராம் ப.சிதம்பரம்.
தற்போது தமிழகத்தில் அரசியல் குழப்பங்கள் நீடிக்கும் நிலையில் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு ப.சிதம்பரம் பச்சைக் கொடி காட்டிவிட்டாராம். அத்துடன் தம்மை மாநில காங்கிரஸ் தலைவர்கள் போல் நடத்தக் கூடாது என சிலபல நிபந்தனைகளையும் விதித்திருக்கிறார் ப.சிதம்பரம். இதை ஏற்றுக் கொண்ட மேலிடம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது என்கின்றன டெல்லி தகவல்கள்.


