தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரோஜா, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றார். அதன் பின்னர், சினிமாவில் மட்டுமல்லாது அரசியலிலும் கால் பதித்து செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாகவும் ஆந்திராவில் வலம் வரத் துவங்கினார்.
ஆரம்பத்தில் ஆந்திர அரசியலில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாக இருந்து வந்த நடிகை ரோஜா, பின்னர் நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகவும் வெற்றி பெற்றார்.
மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்ற நடிகை ரோஜா தற்போது ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று சித்தூர் மாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்டு இருக்கும் கிராம தலைமை செயலகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை ரோஜா சென்றிருந்த போது, அந்த பகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகர் அம்முலுவின் ஆதரவாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் நடிகை ரோஜாவை தாக்கினார்கள்.
திடீரென எதிர்பார்க்காத இந்த தாக்குதலில் நடிகை ரோஜா நிலைகுலைந்து போனார். பின்னர் உடன் பாதுகாப்பிற்காக சென்றிருந்த போலீசார் நடிகை ரோஜாவை மீட்டு, பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
நகரி தொகுதி எம்.எல்.ஏவான நடிகை ரோஜாவின் காரை முற்றுகையிட்டு, போலீசாரின் முன்னிலையிலேயே அவரது சொந்த கட்சியினர் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டிருந்தது ஆந்திர அரசியலில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகரி தொகுதி எம்.எல்.ஏவான ரோஜாவின் காரை முற்றுகையிட்டு அவரது கட்சியினரே தாக்க முயற்சி. தொகுதிப் பக்கம் ரோஜா தலைகாட்டவில்லை எனக்குற்றச்சாட்டு. சினிமா டூ அரசியல்.. கொஞ்சம் கஷ்டம்தான் போலையே.. #Roja #Attack #Nagari pic.twitter.com/RxnVwLau4w
— Mahalingam Ponnusamy (@mahajournalist) January 6, 2020