
சென்னை சாந்தோம் சர்ச்சுக்குச் சென்று, இது இந்துக் கோயில் இருந்த இடம் என்று கூறி தகவல் கேட்டுள்ளார், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத். இதைக் கேட்டு ஆடிப் போன சர்ச் ஊழியர்கள், போலீஸுக்கு ஜஸ்ட் போனிலேயே தகவல் கொடுத்த நிலையில், உடனடியாக போலீசார் ஓடோடி வந்து பாதுகாப்புப் பணிக்கு ரவுண்டு கட்டியதால், அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட மயிலாப்பூர் சாந்தோம் சர்ச்சுக்கு நேற்று காலை சென்றார். அப்போது அவர், சர்ச் ஊழியர்களிடம் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தபோது, ”இங்குள்ள அருங்காட்சியகத்தைப் பார்க்க வேண்டும்! அருங்காட்சியகத்தில் உள்ள பொருள்கள் எல்லாம் கோவிலில் இருந்த பொருட்கள் என சொல்கிறார்கள்! அவற்றை நான் பார்க்க வேண்டும்! உங்கள் பாதிரியாரை கூப்பிடுங்கள்; நான் அவரிடம் பேச வேண்டும்” என்று கூறியுள்ளார்! மேலும், ”சர்ச்சு கட்டுவதற்கு முன்பு இங்கு கபாலீஸ்வரர் கோவில் இருந்தது! அந்த இடத்தில் தான் தற்போது சர்ச்சை உள்ளது!” என்று சொன்னதாக கூறப்படுகிறது!
ஆனால் அருங்காட்சியகம் மூடப்பட்டிருந்ததால், அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்! இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் திடீரென சாந்தோம் சர்ச்சுக்கு வந்ததும், அருங்காட்சியகத்தை பார்வையிட வேண்டும் என்று சொன்னதும், இது முன்னர் கோவில் இருந்த இடம் என்றும் கூறியதால், சர்ச்சுக்கு வந்தவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது
இதுகுறித்து மயிலாப்பூர் போலீசாருக்கு சர்ச் ஊழியர்கள் வாய்மொழியாக புகார் அளித்தனர். வாய்மொழியாக சொன்ன அடுத்த நிமிடத்திலேயே இரண்டு உதவி ஆய்வாளர் தலைமையில் 15க்கும் மேற்பட்ட போலீஸார் படை திரண்டு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்!

