கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.
மேற்கு தில்லியைச் சேர்ந்த மினி குமார் என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. அவரும் அவரது குடும்பத்தினரும் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று ஆம்புலன்ஸ் உதவி கோரினர். அங்கிருந்த பெண் போலீஸ் சுமன், உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
உயரதிகாரிகள் உத்தரவின்பேரில் அந்தப் பெண்ணை போலீஸ் வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதன்படி கர்ப்பிணி மினிகுமார், போலீஸ் வேனில் கயாலாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் அவருக்கு வழியில் பிரசவ வழி அதிகமானதால் வேனிலேயே ஆண் குழந்தை பிறந்தது. உடன் சென்ற பெண் போலீஸும், உறவினர்களும் சேர்ந்து மினி குமாருக்கு பிரசவம் பார்த்தனர்.
போலீஸார் கொடுத்த தகவலின் பேரில் ஆம்புலன்ஸில் விரைந்து வந்து மருத்துவர்கள், செவிலியர்கள் மினி குமாருக்கும் குழந்தைக்கும் முதலுதவி வழங்கி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.