தஞ்சை பெரிய கோவில் தொடர்பாக நடிகை ஜோதிகா பேசிய பேச்சுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகை ஜோதிகா அண்மையில் விருது வழங்கும் விழா ஒன்றில், அந்த அமைப்பு கொடுத்த விருதை கையில் பெற்றுக் கொண்டு பின்னர் பேசினார். அப்போது அவர், ”தஞ்சாவூரில் படப்பிடிப்புக்காக நான் சென்றிருந்தேன். அங்குள்ளவர்கள் தஞ்சை பெரிய கோவிலின் பெருமையை கூறினார்கள். அங்கே நீங்கள் செல்ல வேண்டும் என்றார்கள். ஜோத்பூர் அரண்மனை போன்று பிரமாண்டமானது. நான் ஏற்கனவே பார்த்துள்ளேன் என்றேன். மறுநாள் படப்பிடிப்புக்காக கோவில் அருகே உள்ள மருத்துவமனைக்குச் சென்றோம். அந்த மருத்துவமனை இருக்கும் நிலையைப் பார்த்துவிட்டு இந்தக் கோவிலுக்கு செல்ல மனம் வரவில்லை. கோவிலில் காசு போடாதீர்கள். கோயிலைப் பராமரிப்பது போல் மருத்துவமனை, பள்ளிக்கூடங்களை பராமரியுங்கள் என்று பேசினார்.
ஜோதிகாவின் இந்த பேச்சு சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமூகத் தளங்களில் பலர் எதிராக கண்டனக் குரல் கொடுத்தனர். ஹிந்து மத அமைப்புகள், தலைவர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் இசுலாமியரான ஜோதிகா ஏன் இந்து மதத்தினரின் வழிபாட்டுத் தலமான கோவில்களைச் சொல்ல வேண்டும். ஏன் மற்ற மதத் தலங்களைச் சொல்ல வேண்டியது தானே! எல்லாவற்றுக்கும் இளிச்சவாயர்கள் இந்துக்கள் தானா என்று கேள்வி எழுப்பினர்.
பல்வேறு அமைப்பினரும் தலைவர்களும் ஆன்மிகப் பெரியவர்களும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்த வகையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயரும் ஜோதிகாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது…
தஞ்சாவூர் கோவில் தொடர்பாக நடிகை ஜோதிகா கூறிய கருத்து வருத்தமளிக்கிறது. கோவில்களில் பணம் போடாதீர்கள் என்று கூறுவது தவறானது. கோவில்கள் இருப்பதால் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதே போன்று ஜோதிகாவின் குடும்பத்தார் நிறைய முறை பேசியிருக்கிறார்கள். இப்படிக் கூறுவது மிகவும் தவறு கண்டிக்கத்தக்கது. இனிவரும் காலங்களில் இந்துமதம் குறித்து இவ்வாறு பேசுவதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.