
மதுக்கடைகள் திறப்பு விவகாரத்தில், தமிழக முதல்வருக்கு பாஜக., மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…
தமிழக முதல்வர் மாண்புமிகு @CMOTamilNadu அவர்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள்! வரும் 7 ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் இயங்கும் என்ற அறிவிப்பை வாபஸ் வாங்கிட வேண்டுகோள் வைக்கின்றேன். காரணம் நேற்று டெல்லி,கர்நாடகா மற்றும் வேறு சில மாநிலங்களில் பல கிலோ மீட்டர்கள் மக்கள் வரிசையில் நின்று மது பானங்கள் வாங்குவதை பார்க்கும் போது இத்தனை நாள் ஊரடங்கு காரணமாக ஓரளவு கட்டுக்குள் இருக்கும் கொரோனா தொற்று பரவல் அதிகமாகிட வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக இந்த வாரத்தில் கொரோனா அதிகம் பரவிட வாய்ப்பு என்று மருத்துவ துறையினர் கூறும் வேளையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு என்ற முடிவை மீண்டும் பரிசீலனை செய்திட கேட்டுக் கொள்கிறேன். டாஸ்மாக் கடைகள் திறக்கும் போது மீண்டும் பல நாட்களுக்கு தேவைப்படும் என்பதற்காக அதிகளவில் மதுபானங்களை வாங்கி வைக்க நினைத்து இதுநாள் வரை சேமித்து வைத்த பணத்தையோ அல்லது நகை உள்ளிட்டவைகளை அடகு வைத்தாவது பணம் பெற்று வாங்கிட தூண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
பல நாட்களாக பணி முடக்கத்தால் நாளை என்ன செய்வது என யோசித்து வரும் வேளையில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது பல குடும்பங்களில் சண்டை சச்சரவு ஏற்பட்டு ஓர் அமைதியற்ற சூழலையும் உருவாக்கும். பணத் தேவை இருக்கும் இக்காலத்தில் மதுவிற்காக செலவழித்து பல குடும்பங்கள் கடனாளியாக மாறும் சூழல் உருவாகிடும். எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு வரும் மே 17 வரை டாஸ்மாக் கடைகளை திறக்காமல் இருக்க வேண்டும் எனவும் அதன் பின்பும் படிப்படியாக கடைகளை மூடுவதற்கான ஏற்பாடுகளை செய்வதன் மூலம் வருங்காலத்தில் மதுவில்லா தமிழகம் உருவாக்கிட உதவும்படி அன்புடன் வேண்டுகோள் வைக்கிறேன்… என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

