மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் சோழவந்தான் பகுதியில் பெய்து வரும் கனமழையால் நூறு ஏக்கர் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
மதுரை சோழவந்தான் அருகேயுள்ள தென்கரை கால்வாய் பாசனத்தில், தென்கரை, முள்ளிப்பள்ளம், ஊத்துக்குழி, நாராயணபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கண்மாய் பாசனத்தை நம்பி நெல் பயிரிட்டு வந்தனர். விவசாயிகள் சாகுபடி செய்த நெற்பயிர் அறுவடைக்கு வந்த நிலையில், சோழவந்தான் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் வயலைச் சூழ்ந்த மழைநீரில் மூழ்கியுள்ளன. இதனால் இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக கொரோனா ஊரடங்கு நேரத்தில் பெரும் செலவு செய்து பயிரிட்ட நெற்பயிர் வெள்ள நீரில் மூழ்கிப் போனது விவசாயிகளை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை.