சுதந்திர போராட்ட தியாகி வாஞ்சிநாதன் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று செங்கோட்டையில் உள்ள வாஞ்சி சிலைக்கு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் மணி மண்டபத்தில் இன்று காலை வாஞ்சிநாதனின் நினைவு தினத்தை முன்னிட்டு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் இன்று காலை 9.30 மணி அளவில் செங்கோட்டை வாஞ்சிநாதன் நினைவு மண்டபத்திற்கு வந்திருந்தார். அவருடன் தாசில்தார் மற்றும் அரசு அதிகாரிகள் வந்திருந்தனர்.
சுதந்திர போராட்ட தியாகி வாஞ்சிநாதன் நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வாஞ்சிநாதன் நினைவு மண்டபத்தில் உள்ள வாஞ்சிநாதனின் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் மாவட்ட ஆட்சியர். பிறகு செங்கோட்டை பேருந்து நிலையத்தின் எதிரே அமைந்துள்ள வாஞ்சிநாதன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது!
கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக மற்ற அரசியல் கட்சியினர், அமைப்புகள், தனிநபர்கள் ஆகிய எவருக்கும் மாலை அணிவிக்கும் நிகழ்வுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வாஞ்சிநாதனின் உறவினர் நெல்லையில் இருந்து வந்திருந்த கோபாலகிருஷ்ணன் மட்டும் வாஞ்சி சிலைக்கு மாலை அணிவிக்க போலீசார் அனுமதி அளித்தனர் அதையடுத்து அவர் வாஞ்சி சிலைக்கு மாலை அணிவித்தார்.
முன்னதாக செங்கோட்டை போலீசார் நேற்று மாலை வாஞ்சிநாதன் நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சியினர் எவருக்கும் கொரோனா தொற்று நோய்ப் பரவல் காரணமாக வாஞ்சி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வுக்கு அனுமதி அளிக்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தனர்!
- செய்தி, படங்கள்: கோபி கண்ணன்