‘சாத்தான்குளம் விவகாரத்தில், கனிமொழி மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வாய்ப்புள்ளது,’’ என, அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
சென்னை, வியாசர்பாடியில், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களுடன் கலந்துரையாடினார் அமைச்சர் பண்டியராஜன்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை கடந்து விட்டது’ எனக் கூறும் எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின், குணமடைந்தோர் எண்ணிக்கையை மறைத்து, மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்துகிறார்.
தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை, 42,955 மட்டுமே. தமிழகத்தில், 2,000 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்திலேயே, தொற்று பாதிப்பு உள்ளது. இந்த பேரிடர் காலத்தில், தமிழக அரசு, இயன்ற அளவையும் மீறி செலவு செய்து வருகிறது. அரசில் நிதி போதுமானதாக இல்லை எனக் குறை கூறும் ஸ்டாலின், தன் கட்சி நிதியிலிருந்து உதவலாம்.
சாத்தான்குளம் சம்பவத்தில், உண்மையான குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க, அரசு உறுதியுடன் உள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, தமிழக அரசு மீது, கனிமொழி சுமத்தி வருகிறார். குற்றவாளிகளை தப்ப வைக்க, தமிழக அரசு முயற்சிப்பதாகவும், அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
உயர் நீதிமன்றம் கூட, தமிழக அரசு இந்த விவகாரத்தில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பாராட்டியுள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் மீது, கனிமொழி கூறிய குற்றசாட்டுகள், நீதிமன்ற அவமதிப்பு ஆகும். எனவே, அவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.” என்றார் பாண்டியராஜன்.