மதுரையில் 3 முறைக்கு மேல் விதிமுறைகளை மீறும் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து
செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் ஓட்டுனர் மற்றும் 3 பயணிகள் மட்டும் பயணம் செய்ய வேண்டிய
ஆட்டோக்களில் இருக்கையை மாற்றி 10க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச்
செல்வதாகவும், பேருந்துகளை போல் ஒவ்வொரு நிறுத்தத்திலும் நின்று பயணிகளை
ஏற்றியும், இறக்கி விட்டும் செல்வதாகவும் புகார் எழுந்தது. இந்த வழக்கு
நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று
விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நேரில் ஆஜராகி பதில் அறிக்கை
தாக்கல் செய்தனர். அதில் விதிமீறலில் ஈடுபட்ட ஆட்டோக்களிடமிருந்து
ரூ.10,20,200 அபராதமாக வசூலிகப்பட்டுள்ளது என்றும், மேலும் விதிமீறலில்
ஈடுபட்ட 1,427 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 1333 ஆட்டோக்களின்
உரிமம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து
3முறைக்கு மேல் விதிமுறைகளை மீறும் ஆட்டோக்களின் உரிமத்தை உடனடியாக ரத்து
செய்ய நீதிபதிகள் உத்தரவு!



