தேரா சச்சா தலைவர் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பு
2 பக்தைகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேரா சச்சா சௌதா
அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
அளித்தது.
2002 ஆம் ஆண்டில், இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ராம்
ரஹீம் சிங் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தேரா சச்சா சௌதா ஆன்மிக அமைப்பின் தலைவராகத் திகழும் ராம் ரஹீம் சிங், 15
ஆண்டுகளுக்கு முன்னர் பக்தை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு
தொடரப்பட்டது.
இந்த வழக்கில் எதிர்மறையான தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதால்,
ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது.
லட்சக்கணக்கில் பக்தர்களையும் ஆதரவாளர்களையும் கொண்ட ராம் ரஹீம் சிங் மீது
எதிர்மறையான தீர்ப்பு வந்தால் சுமார் 2 லட்சத்துக்கும் மேல் திரண்டுள்ள அவரது
ஆதரவாளர்களால் வன்முறை அசம்பாவிதங்கள் நிகழக் கூடும் என்பதால், 144 தடை
உத்தரவு, ராணுவம் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று செய்யப்
பட்டிருந்தது. பல இடங்களில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. ஹரியானா மாநிலம்
முழுவதுமே பெரிதும் பரபரப்புடன் திகழ்வதால், துப்பாக்கி ஏந்திய மத்திய
பாதுகாப்பு படையினரும் போலீஸாரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது என்றாலும், தண்டனை
குறித்த விவரங்கள் வரும் 28 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி
அறிவித்தார்.




