- தென்திருப்பதி திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர்….
- ஆன்லைன் முன்பதிவு தரிசனம் அறிமுகம்…..
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது திருவண்ணாமலை. தமிழகத்தின் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப் பெருமாளை தரிசனம் செய்ய தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இன்று புரட்டாசி, முதல் சனிக்கிழமை நாளில் பக்தர்களின் வசதிக்காக மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இன்று அதிகாலை மூன்று மணிக்கு ஸ்ரீனிவாசப்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்று. அதனை தொடர்ந்து அதிகாலை 5.30 மணிக்கு காலசாந்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதிகாலையில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு வைரஸ் தொற்று காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே மலைக்குச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் பக்தர்களின் வசதிக்காக ஆன்லைன் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
ஆன்லைன் பதிவு செய்தவர்களுக்கு தனி வரிசை மூலமாக தரிசனம் செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. காலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கோவிலிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை