அக்டோபர் 2. இன்று லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள்.
அரிதான தலைவரான லால்பஹாதூர் சாஸ்திரி அவர்களின் வாழ்வில் நடந்த இரு நிகழ்சிகளை இங்கு பார்ப்போம்.
இந்தியாவில் இப்படி ஒரு தலைவரா?
நாட்டுத் தலைவராக மட்டுமின்றி வீட்டுத் தலைவராகவும் லால் பகதூர் சாஸ்த்ரி ஒரு எடுத்துக் காட்டாக விளங்கினார். தான் கடைபிடித்த நேர்மை, எளிமை போன்ற நற்குணங்களைத் தன் வாரிசுகளுக்கும் அளிப்பதில் தீவிரமாக இருந்தார்.
தன் பதவியையும் அதிகாரத்தையும் தன் குடும்பத்தினரின் சௌகர்யத்திற்கு உபயோகிக்கக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தார். தன் குழந்தைகள் நாட்டின் மற்ற குழந்தைகளைப் போலவே சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்பினார்.
ஒரு முறை லால் பகதூர் சாச்திரின் மகன் அனில் சாஸ்த்ரி புது டில்லியில் ஒரு பெரிய கல்லூரியில் சேர்ந்தபின் பீஸ் கட்டுவதற்காக கியூவில் நின்றிருந்தார். கியூ மிகப் பெரியதாக நீண்டிருந்தது. மற்ற மாணவர்களோடு சேர்ந்து அனில் சாஸ்திரியும் வெயிலில் நின்றிருந்தார். அன்றுதான் பீஸ் கட்ட கடைசி நாள். அவருக்கு தாகமெடுத்தது. நாக்கு வறண்டு போனது. ஆனால் தண்ணீர் குடிப்பதற்காக கியூவை விட்டு நகர்ந்து சென்றால் பீஸ் கட்ட இயலாமல் போய்விடும் என்ற தயக்கத்தால் வெயிலிலேயே நின்றிருந்தார். வெயிலின் தாக்கம் அதிகமாகி அனில் சாஸ்த்ரி அங்கேயே மயக்கமடைந்து விழுந்து விட்டார்.
மற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். முதலுதவிக்குப் பிறகு கண் திறந்த அனில் சாஸ்திரியிடம் அவருடைய தந்தையார் பெயரையும் வீட்டு விலாசமும் கேட்டனர். தன் தந்தையார் லால் பகதூர் சாஸ்திரி என்று கூறி வீட்டு முகவரியை அனில் சாஸ்திரி தெரிவித்ததும் அங்கிருந்தோர் பேச்சற்று நின்று விட்டனர். நம் பிரதம மந்திரியின் மகனா இவர்? இத்தனை எளிமையா? என்று வியந்து போனார்கள்.
லால் பகதூர் சாஸ்த்ரி தன் மகன்களோ மகள்களோ தன் பதவியை துஷ்பிரயோகம் செய்ய என்றுமே வாய்ப்பளித்ததில்லை. அவர்கள் பள்ளிக்கோ கல்லூரிக்கோ செல்லும் போது கூட சாதாரண பஸ்சிலேயே சென்று வந்தனர்.
இவ்வாறு நாட்டுக்கும் வீட்டுக்கும் ஆதர்சமான தலைவராக திகழ்ந்தார் லால் பகதூர் சாஸ்த்ரி.
சொல்வீரமல்ல, செயல் வீரம்:
மண்வெட்டி பிடித்த ரயில்வே மந்திரி:-
அப்போது லால் பகதூர் சாஸ்த்ரி ரயில்வே அமைச்சராக இருந்தார். ஒரு முறை அவர் வாரணாசிக்கருகில் சேனாபுரி என்ற ஊருக்குச் செல்ல வேண்டி வந்தது. அங்கு அவர் ரயிலில் சென்றார். சேனாபுரி ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பாரம் உயரம் குறைவாக இருந்தது. குள்ளமாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி ரயிலிலிருந்து கீழே இறங்க மிகவும் சிரமப் பட்டார். அதைப் பார்த்த பிளாட்பாரத்திலிருந்த கிராமத்துப் பெண்கள் சிலர் சிரித்து விட்டனர். "சரியான பிளாட்பாரம் இல்லாமல் பெண்கள் எத்தனை சிரமப் படுகிறார்கள் என்பது ரயில்வே அமைச்சருக்கு இப்போது தெரிய வந்திருக்கும்" என்று உரக்கக் கூறினார்கள்.
பிளாட்பாரத்தில் இறங்கிய லால் பகதூர் சாஸ்திரி நேரே ஸ்டேஷன் மாஸ்டரின் அறைக்குச் சென்று அங்கிருந்து ஒரு மண்வெட்டியைக் கேட்டு வாங்கி எடுத்து வந்தார். பிளாட்பாரத்திற்கு அருகில் மண்ணை வெட்டி சிறிது சிறிதாகக் கொண்டு வந்து மண்ணாலான அந்த கிராமத்துப் பிளாட்பாரத்தில் போட ஆரம்பித்தார். அதைப் பார்த்த அருகிலிருந்த சிலரும் ஆளுக்கொரு மண்வெட்டியை எடுத்து வந்து மண்ணை வெட்டி பிளாட்பாரத்தில் கொட்ட ஆரம்பித்தனர். மூன்று மணி நேரத்தில் பிளாட்பாரம் தேவையான அளவுக்கு உயர்ந்தது.
அதிகாரம் என்பது வெறும் கட்டளை இடுவதற்கு மட்டுமல்ல; பொது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே என்ற கருத்தை நடை முறையில் நடத்திக் காட்டிய ஆதர்ச தலைவர் லால் பகதூர் சாஸ்திரி.
தற்கால தலைவர்களுக்கும் அவருக்கும்தான் எத்தனை வேறுபாடு!
-ராஜி ரகுநாதன்



