தீபாவளியன்றும் விடுமுறை எடுக்காமல் போக்குவரத்தை சீர்செய்து கொண்டிருந்த போலீஸ்காரரை, தனது காரில் இருந்து இறங்கி சென்று தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார் தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களின் ஆளுநர் நரசிம்மன்.
தெலங்கானா மாநிலத்தில் தீபாவளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு விடுமுறையும் 19 ஆம் தேதி வழங்கப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையிலும் தீபாவளி பண்டிகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் காலை வெளியே சென்றிருந்த தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களின் ஆளுநர் நரசிம்மன், காரில் ராஜ்பவனுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது சைபராபாத் அருகே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். உடனடியாக காரை நிறுத்த சொன்னார் ஆளுநர். பின்னர் காரில் இருந்து இறங்கி, போக்குவரத்து பணியில் இருந்த அனைத்து போலீஸாருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை எடுக்காமல் பணி செய்யும் போலீஸாரை அவர் வாழ்த்தினார். ஆளுநரே காரை விட்டு இறங்கி வந்து வாழ்த்து சொன்னதால் போலீஸார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
செய்தி… கே.சி.சாமி


