spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்மேகதாது அணை எதிர்த்து 28 ஆம் தேதி முழு அடைப்பு: திமுக ஆதரவு

மேகதாது அணை எதிர்த்து 28 ஆம் தேதி முழு அடைப்பு: திமுக ஆதரவு

- Advertisement -

சென்னை: வரும் 28 ஆம் தேதி விவசாயிகள் சங்கங்களின் சார்பில் நடத்தப்படவுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கையினை வெளியிட்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை; 8-3-2015 அன்று நான் விடுத்த அறிக்கையில், “காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புப்படி கர்நாடக அரசு, தமிழ்நாட்டிற்கு, ஆண்டு தோறும் 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். இதனை 12 மாதங்களிலும் பகிர்ந்து வழங்க வேண்டுமென்று தீர்ப்பிலே கூறப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடக அரசு இதனைக் காதில் போட்டுக் கொள்ளாமல், அங்குள்ள அணைகள் நிரம்பியவுடன் உபரி நீரை மட்டுமே தமிழகத்திற்கு வழங்குகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையிலே தான் தற்போது தமிழகத்திற்கு உபரியாகத் தங்களிடம் உள்ள நீரை வழங்கி வந்த கர்நாடகா, அந்தத் தண்ணீரையும் தாங்களே தேக்கி வைத்துப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், கர்நாடகாவிலே மேலும் இரண்டு அணைகளை மேகதாது என்ற இடத்தில் கட்ட முடிவு செய்து, அவற்றைக் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளிலே ஈடுபட்டு வருகிறார்கள்” என்பதைப் பற்றி விளக்கமாகத் தெரிவித்து, அதற்காக நம்முடைய விவசாயப் பெருங்குடி மக்கள் அந்த அணையை முற்றுகையிடச் சென்ற போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதோடு, விவசாயிகள் அறிவித்த முற்றுகைப் போராட்டத்திற்கு தி.மு. கழகத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் உண்டு என்றும் தெரிவித்திருந்தேன். கர்நாடகா அரசு தற்போது மேகதாதுவில் அணைகளைக் கட்ட மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சி, நடுவர் மன்றத்தின் முடிவுக்கு முற்றிலும் எதிரானது என்பதுடன், இதுகுறித்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற போது, அந்தத் தீர்ப்புக்காகக் காத்திருக்காமல், குறுக்கு சால் ஓட்டுவதைப் போன்றதுமாகும். இதுபற்றி கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டியில், “கர்நாடக அரசின் நடவடிக்கையை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில்முறையீடு செய்வது அந்த மாநிலத்திற்கு எந்தப் பயனும் ஏற்படுத்தாது. தமிழக அரசு எந்த நடவடிக்கை மேற்கொண்டாலும் மேகதாது அருகே அணைகள் கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. தமிழக அரசின் எதிர்ப்பு குறித்து கர்நாடகாவைச் சேர்ந்த யாரும் ஆதங்கப்பட வேண்டாம். இரு அணைகள் கட்டும் கர்நாடக அரசின் முடிவை சட்டத்தால் தடுக்க முடியாது” என்றெல்லாம் கூறிய போதும், தமிழக அரசின் சார்பில் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின்வாழ்வாதாரத்iப் பாதுகாத்திட முதலமைச்சர் வாயே திறக்கவில்லை என்பதோடு, தமிழகத்திலே உள்ள எதிர்க்கட்சிகள் எல்லாம் இதுபற்றிக் கலந்தாலோசிக்க அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துப் பேச வேண்டுமென்று கேட்டுக் கொண்டதையும் பொருள்படுத்தவில்லை. மாறாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினால், கடமையெல்லாம் முடிந்து விட்டது என்று கருதிக் கொண்டு அதையே செய்து காலங்கழித்து வருகிறார்கள். ஒருவேளை இன்றைய முதலமைச்சர் அனைத்துக் கட்சித் தலைவர்களை யெல்லாம் அழைத்துக் கூட்டம் நடத்தினால், முன்னாள் முதல் அமைச்சர் என்ன சொல்வாரோ என்று பயந்து கொண்டிருக்கிறாரோ என்னவோ? ஏனென்றால் மத்திய அரசு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த போதும், ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்த போதும், தமிழக முதலமைச்சர், நிதியமைச்சர் என்ற முறையில் அரசின் சார்பில் எவ்விதக்கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தமிழகத்தில் இந்தப் பிரச்சினையில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. அலட்சியமாக இருந்த போதிலும், காவிரி டெல்டா மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், பி.ஆர். பாண்டியனும், மற்றும் அந்த அமைப்பின் நிர்வாகிகளும் பெரு முயற்சி எடுத்து, தமிழகத்திலே உள்ள ஆளுங்கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளையும் நேரிலே அழைத்து 21-3-2015 அன்று சென்னையில் கூட்டிய கூட்டத்தில் வரும் 28ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு (பயத்) போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆளுங்கட்சிக்கு அவர்கள் அழைப்பு விடுத்தும், அந்தக் கூட்டத்தை அவர்கள் புறக்கணித்து விட்டார்கள். கழகத்தின் சார்பில் செய்தித் தொடர்பாளர் தம்பி டி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு, கழகத்தின் ஆதரவினைத் தெரிவித்திருக்கிறார். புதிய அணைகளைக் கட்டுவதற்காக மத்திய அரசு மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதியைக் கூடப் பெறாமல், அண்மையில் கர்நாடக அரசு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் மேகதாது அணைகள் கட்டுவதற்காக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறது. இதையெல்லாம் கண்டிக்கும் நிலையில் 21ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் 28ஆம் தேதி முழு அடைப்பு நடத்தவும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒருங்கிணைந்து பிரதமரை நேரில் சந்தித்துக் கோரிக்கையை வலியுறுத்தவும், தமிழகஅரசின் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கை தமிழக அரசு விரைவுப் படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை வற்புறுத்தவும் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இதற்குப் பிறகாவது இந்தப் பிரச்சினையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தமிழக ஆளுங்கட்சி விழித்துக் கொண்டு தமிழக விவசாயிகளின் தொடரும் துயரங்களைக் களைந்திட முன் வர வேண்டுமென்று வலியுறுத்துவதோடு, அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் நடத்த முன்வந்துள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தனது ஒத்துழைப்பையும், ஆதரவையும் நல்கும் என்பதை அறிவிக்கின்றேன். விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் நடத்திய கூட்டத்திற்கு வருகை தராத கட்சிகளும் 28ஆம் தேதி முழு அடைப்பில் கலந்துகொண்டு, தமிழகத்தின் ஒட்டுமொத்த ஆதரவும் விவசாயிகளுக்குப் பின்பலமாக இருக்கிறது என்பதை மெய்ப்பித்துக் காட்ட முன்வர வேண்டும். ஆளுங்கட்சியோ, அல்லது வேறு ஏதாவது கட்சிகளோ அதற்கு முன்வரவில்லை என்றால் தமிழக விவசாயிகள் அவர்களை என்றென்றும் மன்னிக்க மாட்டார்கள். பெருந்தன்மையோடு தமிழக அரசே முன் வந்து, விவசாயிகளின் இந்தப் போராட்டத்தை ஆதரித்து தமிழகத்தில் 28-3-2015 அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு வெற்றிகரமாக நடைபெறும், அரசுப் பேருந்துகள் இயங்காது, கடைகள், அலுவலகங்கள் எதுவும் திறக்காது என்றெல்லாம் அறிவிப்பது தான் முறையானதாக இருக்கும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிகர் சங்கங்களும், திரையரங்க உரிமையாளர்களும், அனைத்துத் தரப்பினரும் இந்தப் பிரச்சினையின் அத்தியாவசியத்தை உணர்ந்து முழு ஒத்துழைப்பளித்திட முன்வருவார்கள் என்று நம்புகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe