- சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…..
- ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக……
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற, சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு இன்று ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, பக்தர்கள் மலைக்கோவிலுக்குச் செல்ல வனத்துறையும், கோவில் நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளது.
இன்று முதல் 4 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினமும் காலை 7 மணி முதல், மதியம் ஒரு மணி வரை மட்டும் பக்தர்கள் மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
தற்போது வட கிழக்கு பருவமழை காலமாக இருப்பதால், மலைப் பகுதிகளில் மழை பெய்தால் பக்தர்கள் மலைக்கு மேலே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் கோவிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள நீரோடைகளில் பக்தர்கள் நீராட வேண்டாம் என வனத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
கோவிலில் தரிசனம் முடித்த பக்தர்கள் உடனடியாக அடிவாரப்பகுதிக்கு திரும்பி விட வேண்டும் என்று, வனத்துறையினர் அறிவித்து வருகினறனர்.
தரிசனத்திற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா (எ) பெரியசாமி மற்றும் அதிகாரிகள், வனத்துறையினர் செய்துள்ளனர்.
இன்று முதல் நாள் தரிசனத்திற்காக, அதிகாலை முதலே தாணிப்பாறை நுழைவுப்பாதை பகுதியில் ஏராளமான பக்தர்கள், மலைக்குச் செல்ல வரிசையாக காத்திருந்து செல்ல துவங்கியுள்ளனர்.